சீனாவுக்கு மறைமுக வார்னிங்.. இந்தியா, அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு அதிரடி அறிக்கை
டெல்லி: சுதந்திரமான இந்தோ பசிபிக் மண்டலம் தேவை என்று குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் குவாட் (Quad) நாடுகள் கூட்டணி ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.
ரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் "குவாட்" நாடுகளின் தலைவர்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜோ பிடன் பேச்சு
4 தலைவர்களுமே இந்தோ பசிபிக் மண்டலம் சுதந்திரமானதாகவும் அனைவருக்குமானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். ஜோ பைடன் பேசுகையில், சர்வதேச சட்டங்களின்படி நமது மண்டலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சுதந்திரம் தேவை
சுதந்திரமான சர்வதேச சமூகம் அமைவது முக்கியமானது. நமது ஒவ்வொருவரின் வருங்காலமும் நமது நாடுகளின் வருங்காலத்திற்காகவும், சுதந்திரமான இந்தோ பசிபிக் மண்டலம் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்த மண்டலத்தில் கூட்டுறவை மேம்படுத்துவதற்கு குவார்ட் நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று நம்புகிறேன். வருங்காலங்களில் உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாம் அனைவருமே நமது ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டுள்ளோம். இந்தோ பசிபிக் மண்டலத்தில் சுதந்திரமான சூழல் நிலவ வேண்டும் என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருக்கிறோம். தடுப்பூசி, பருவநிலை மாற்றம், புதிதாக உருவெடுத்து வரும் தொழில்நுட்பம் போன்றவை நமது இந்த ஆலோசனையில் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது.
ஒரே குடும்பம்
குவாட் நாடுகளின் கூட்டமைப்பு இந்த உலகத்தின் நன்மைக்காக உழைக்கக்கூடிய கூட்டமைப்பு. இந்தியாவின் பாரம்பரிய கொள்கை வாசுதேவ குடும்பம் என்பதுதான். அதாவது உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுவது இந்திய பண்பாட்டின் பாரம்பரியம். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்பை விடவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.
இந்தோ பசிபிக் நிலைத்தன்மை
பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் இந்தோ பசிபிக் மண்டலத்தின் வலிமை ஆகியவற்றை காப்பதற்காக நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும். இந்தோ பசிபிக் மண்டலத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளின் கூட்டமைப்பு முக்கியத்துவமாக மாறும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில், சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட நான்கு நாடுகளில் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். நமது இந்த கூட்டமைப்பு, அமைதி, நிலைத்தன்மை, செழுமை, வளமை போன்றவற்றுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.
நாம் அனைவரும் இணைந்து, புதிய எதிர்காலத்தை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சீனாவுக்கு எச்சரிக்கை
குவார்ட் நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தோ பசுபிக் மண்டலத்தை அனைவருக்கும் பொதுவானதாக மாறவேண்டும். ஜனநாயகத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும், நமது கூட்டுறவு மேம்பட வேண்டும். சர்வதேச நாடுகளின் எல்லை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிக்க முயற்சி செய்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில், இந்தோ பசிபிக் மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த அதன் கடற்படைகள் முனையும் இந்த நேரத்தில், இதுபோன்ற ஒரு கூட்டறிக்கை வெளியாகியுள்ளது முக்கியமாக கருதப்படுகிறது.