கும்பல் கொலைனா என்னானே தெரியாது.. ஆனா இப்போ..! ட்விட்டரில் பாய்ந்த ராகுல்காந்தி
டெல்லி: 2014ஆம் ஆண்டுக்கு முன்பு கும்பலால் கொலை என்ற வார்த்தையையே பலர் அறிந்திருக்க மாட்டார்கள் எனவும், லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவத்தை பாஜக அரசு திசைத்திருப்ப முயற்சி செய்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் . முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிக் மீரா பயணித்த கார் கூட்டத்திற்குள் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும் இதுவே பின்னர் வன்முறையாக மாறியது.
இந்த விவகாரம் தொடர்பாக தாமக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் சம்பவம் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ராகுல்காந்தி கேள்வி
இந்தியா முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய லக்கிம்பூர் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழுவின் தகவலை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என என ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சரை அமைச்சரைவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், உண்மை உங்களுக்கு முன்னால் உள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி கூறியிருந்தார்.

நாங்கள் நீதியை பெறுவோம்
இந்த நிலையில் புகாருக்குள்ளான அமைச்சரை பதவிநீக்கம் செய்ய எண்ணம் துளிகூட இல்லாததுபோலவே பாஜக தலைமை உள்ளது. இந்நிலையில் லக்கிம்பூர் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது எனவும், அந்த கொலையாளியின் தலையில் மோடி அரசு கை வைத்திருக்கிறது, இல்லையேல் இந்நேரம் அந்த அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார் என்பதே உண்மை எனவும் ஆனால் நினைவில் கொள்ளுங்கள் - நாங்கள் நீதியைப் பெறுவோம்! என ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் “கும்பல் கொலை”
மேலும் தனது மற்றொரு பதிவில், கும்பலால் அடித்துக் கொலை' செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் எனவும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 'கும்பல் கொலை' என்ற வார்த்தையையே பலர் அறிந்திருக்க மாட்டார்கள் எனவும், ஆனால் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன் இதுபோன்ற கொலை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன எனா ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல்
உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேலும் உத்திரபிரதேச மாநிலத்திற்கு அவர் அடுத்தடுத்து சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவுள்ளார். இந்தநிலையில் ராகுல்காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் தினமும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு அறிக்கைகளையும் போராட்ட அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications