சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம்.. ரிஹான்னா, தன்பெர்க் ட்வீட் குறித்து ராகுல் காந்தி
டெல்லி: டெல்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் உலகளவில் இந்தியாவின் நற்பெயரை கடுமையாக பாதித்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய போது விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
டெல்லியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதுகுறித்து பாப் பாடகி ரிஹான்னா, பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

கருத்து
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கூறுகையில் சர்வதேச பிரபலங்களின் கருத்துகளை கண்டிக்கிறோம். ஒரு விஷயத்தில் கருத்து சொல்வதற்கு முன்னர் உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளது.

வாழ்வாதாரம்
இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு உரையாற்றுகையில், டெல்லியை சுற்றி விவசாயிகள் உள்ளனர். நமக்கு வாழ்வாதாரத்தை கொடுப்பவர்கள் அவர்கள். கோட்டையை சுற்றி அரண்கள் அமைப்பது போல் டெல்லி ஏன் மாற்றப்படுகிறது?

தாக்குதல்
நாம் ஏன் அவர்களை மிரட்டுகிறோம், தாக்குகிறோம், கொல்கிறோம்? மத்திய அரசு அவர்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க ஏன் முன்வரவில்லை? இந்த பிரச்சினை நாட்டுக்கு நல்லது அல்ல. 2 ஆண்டுகளுக்கு சட்டங்களை ஒத்தி வைக்க இன்னும் சலுகை இருக்கிறது என பிரதமர் கூறுவதற்கு என்ன அர்த்தம்?

வேலை
இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். நாட்டில் நல்ல தலைமை இல்லாத நிலை உள்ளது. அவர்கள் சும்மா பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், பின்னர் அவரவர் வேலையை பார்க்கிறார்கள். உங்கள் வேலையை செய்வதற்குத்தானே மக்களை உங்களை தேர்வு செய்தார்கள்.

பாதுகாப்பு
விவசாயிகளை பாதுகாப்பதுதான் அரசின் தலையாயக் கடமையாகும். விவசாயிகளின் பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதத்தால் இந்தியாவின் நற்பெயர் உலக நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உறவுகளுடனான இணக்கமான அணுகுமுறை இன்று பாஜக- ஆர்எஸ்எஸ்- ஆல் சிதறிக் கிடக்கிறது என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications