12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட்.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் தர்ணா.. வெங்கையா நாயுடு விமர்சனம்
டெல்லி: 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டத்திற்கு ராஜ்ய சபா சபாநாயகர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸின் டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, சிபிஎம்மின் இளமாறன் கரீம் ஆகியோர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பெரும் அமளிக்கு இடையே.. இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற அவை.. இன்று அவையில் என்ன நடக்கும்?
எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இதனால் ஸ்தம்பித்தது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரண்டு வகைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவை தொடங்கும் முன்பே 12 ராஜ்ய சபா எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர்.
|
ராகுல் காந்தி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களோடு சேர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் தர்ணா போராட்டம் செய்தார். நாடாளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்தனர். ராஜ்ய சபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது. எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக நசுக்குகிறது என்று காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரண்டு அவையிலும் குரல் எழுப்பியது.
12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட்
இதையடுத்து அவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக 12 மணி வரை ராஜ்ய சபா ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்ய சபா ஒத்திவைக்கப்படும் முன் அவையில் பேசிய ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகமற்ற நடவடிக்கை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் உரிமை சபாநாயகருக்கு இருக்கிறது.
வெங்கையா நாயுடு
நான் செய்தது தவறு என்று நாடாளுமன்றத்தின் எந்த விதியிலும் குறிப்பிடப்படவில்லை. நான் செய்தது தவறு என்று எதிர்க்கட்சியினர் எப்படி சொல்கிறார்கள் என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. 12 எம்பிக்கள் தங்கள் கருத்துக்கு மன்னிப்பு கேட்க முன்வரவில்லை. ஆனால் நான் எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று மட்டும் கோரிக்கை விடுகிறார்கள்.
ஜனநாயகம்
இது எப்படி ஜனநாயகம் ஆகும். அவை விதிகளின்படியே நான் நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். 12 எம்பிக்கள் செய்த தவறை பற்றி யாரும் பேசவில்லை. 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தவறு என்று சொல்பவர்கள் எம்பிக்கள் செய்ததை பற்றி பேசவில்லை. 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என்று யாரும் கேட்கவில்லை.
தவறா?
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவையில் கூச்சல் போடுவது சரியென்றால், கூச்சல் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டும் தவறா? என்று ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.