இந்தியாவில் விரைவில் வருகிறது டிஜிட்டல் கரன்சி.. அறிவித்த RBI.. யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
டெல்லி: உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல சூடுபிடித்து வரும் நிலையில் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் என நீண்ட காலமாக கூறி வந்த நிலையில் தற்போது அதற்கான முன்முயற்சியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
விரைவில் டிஜிட்டல் கரன்சி பயன்பாடு குறித்து வெள்ளோட்டம் அறிவிக்கப்படும் என்றும், இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் கரன்சி நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் எனவும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சில தகவல்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கவனம்.. கிரெடிட், டெபிட் கார்ட்.. ஆட்டோ பேமெண்ட் விதிகளை அதிரடியாக மாற்றிய ஆர்பிஐ.. ரொம்ப முக்கியம்!
சட்டப்பூர்வமானது
அதில் கூறப்பட்டுள்ளதாவது, "நாணயக் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக டிஜிட்டல் கரன்சி இருக்கும். இதனை குடிமக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல தற்போது ரூபாய் நோட்டுக்களாக வங்கியில் இருப்பு வைத்திருப்பதைப் போல இந்த டிஜிட்டல் கரன்சியையும் வங்கியில் இருப்பு வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
புதிய அம்சங்கள்
வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல இதனை சேமித்து வைத்துக்கொள்வதற்கென தனியாக வங்கிக் கணக்குகள் தேவையில்லை. தற்போது புழக்கத்தில் இருக்கும் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏற்படும் செலவை இந்த டிஜிட்டல் கரன்சி குறைக்கும். சர்வதேச அளவில் காகித பயன்பாட்டை குறைத்து உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது. எனவே டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
சுற்றுச்சூழல்
இதர கிரிப்டோ கரன்சியை போலவே ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த டிஜிட்டல் கரன்சி பாதுகாப்பானதாக இருக்கும். அதே நேரத்தில் அனைவரும் அணுகக்கூடிய விதத்தில் எளிதாகவும் இருக்கும். இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் கரன்சி நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதேபோல கட்டணங்கள் செலுத்தும் முறையையும் இது எளிதானதாக மாற்றும். இந்த கரன்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அதே நேரத்தில் சைபர் தாக்குதலை எதிர்கொள்ளும் திறனுடனும் இருக்கும்.
பிட்காயின்
இவ்வாறு இருக்கையில் பொதுமக்கள், வணிகர்கள் என அனைவரும் இந்த கரன்சியை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அதேவேளையில் இதில் மேலெழும் சிக்கல்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்" என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 2008ல் முகம் தெரியாத நபர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பின் காயின் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த தாக்கம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. பலரும் இதனை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் இதை அணுக முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால் பலர் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே இதனை தவிர்க்க அரசே டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய இருக்கிறது.