மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி
டெல்லி: மதுரை மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். முன்னதாக மதுரை தொகுதி மக்களவைதேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
புகார் விவரம்
அந்த வழக்கில் தேர்தலின் போது மதுரையில் நடத்தப்பட்ட அதிமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், உணவு,பரிசு பொருட்கள் மற்றும் நபர் ஒருவருக்கு தலா ரூ.500 கொடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்திற்கு வந்தவர்களை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் அழைத்து வந்தனர்.
எச்சரித்த நீதிமன்றம்
இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், பொதுநலம் என்ற பெயரில் இதுபோல வழக்கு தொடர்வதை ரமேஷ் வாடிக்கையாக வைத்துள்ளதாக குறிப்பிட்டது. நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் பின் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட் போன ரமேஷ்
இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி ரமேஷ் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரினார். மேலும் மதுரையில் வாக்கு பதிவு இயந்திர அறைக்குள் தாசில்தார் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளஓட்டுகள் போடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விதிகளுக்கு புறம்பாக அதிமுக வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்துள்ளனர். மதுரை தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது என புகார் தெரிவித்திருந்தார்
வழக்கு ஏற்பு
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படாமலேயே இருந்தது. எனவே தேர்தலை ரத்து செய்ய கோரும் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம், ரமேஷ் சார்பில் கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் முன்பு 15-ம் தேதி முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இன்று விசாரித்தனர்
கைவிரித்த சுப்ரீம் கோர்ட்
கே.கே.ரமேஷின் மனுவை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமயிலான அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரை மக்களவை தொகுதியில் ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்து முடிந்து விட்டதால், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.