ஏழைகளுக்காக முன்பதிவில்லாத ரயில்களை இயக்குங்கள் - ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை
முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படாததால் ஏழை மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று ரயில்வே அமைச்சர் தமிழக எம்.பிக்கள் சு.வெங்கடசேன், கலாநிதி வீராசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் என்றும்
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் முன்பதிவில்லாத சாதாரண ரயில்களை இயக்க வேண்டும் என்றும் விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்கவேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்விடம் தமிழக எம்.பிகள் சு.வெங்கடேசனும், கலாநிதி வீராச்சாமியும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கொரோனா பரவல் தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படவே, முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. சாதாரண பயணிகள் ரயிலும் முன்பதிவு செய்யப்பட்டாத பயணிகள் ரயிலில் பயணம் செய்யவும் தடை நீடிக்கிறது.

இந்த நிலையில் சாதாரண ரயில்களை இயக்க வேண்டும் என்றும் விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்கவேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்விடம் தமிழக எம்.பிகள் சு.வெங்கடேசனும், கலாநிதி வீராச்சாமியும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பெரும் தொற்று ஏற்பட்டவுடன் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தைக் காரணம் காட்டி சாதாரண பயணி வண்டிகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டில் 3,715 சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்பட்டன.
அவற்றில் 200 கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய 500 வண்டிகள் விரைவு வண்டிகள் ஆக மாற்றப்பட்டன. ஆனால் விரைவு வண்டிகளும் புறநகர் போக்குவரத்து ரயில்களும் அத்தியாவசிய பயணிகளுக்கும் திறந்துவிடப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாமல் தொடர்கிறது. அதுமட்டுமல்ல விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளும் இணைக்கப்படுவது இல்லை. சாதாரண பயணி வண்டிகள் மொத்த பயணிகளில் 22 சதமானம் ஆகும். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் ஆகும்.

கிராமங்களிலிருந்து ஒட்டிய நகரங்களுக்கு அவர்கள் அன்றாடம் தங்கள் பொருள்களை எடுத்துச்சென்று விற்பதற்கும் மாணவர்கள் நகரத்தில் படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் நகரங்களுக்கு சென்று வர இந்த சாதாரண வண்டிகள் மிகவும் பயன்பாடு உடையனவாக இருந்தன. இவர்களுக்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்று வருவது கிராமப்புற மக்களுக்கு மிகவும் சாத்தியமானதாக இருந்தது.
மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் தான் இந்த பயணி வண்டிகளில் இருந்து வருமானம் என்றபோதிலும் சமூக கடமை ஆற்றும் நோக்கத்தோடு இந்த வண்டிகள் ஒட்டப்பட்டன. பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு விரைவு வண்டிகளும் புறநகர வண்டிகளும் ஓரளவுக்கு இயக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாதது கிராமப்புற மக்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளது.
விரைவு வண்டிகளையும் பெரும்பகுதி புறநகர வண்டிகளையும் இயக்கினாலும் சாதாரண பயணி வண்டிகளை இயக்காததன் உள்நோக்கம் என்ன? லாபம் வரும் வண்டிகளை மட்டும் ஓட்டிவிட்டு லாபம் வராத வண்டிகளை ஓட்டக்கூடாது என்ற கொள்கையை ரயில்வே அமைச்சகம் எடுத்து உள்ளதா என்று அவர் கேட்டுள்ளார்.
பெருந்தொற்று சமூக இடைவெளியை கோருகிறது. இப்போது பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு ரயில் வண்டிகள் இல்லாததால் பேருந்துகள் மிகவும் நெரிசலாக உள்ளன. இது சமூக இடைவெளியை மிகவும் பாதிக்கிறது.

எனவே சமூக இடைவெளியை உருவாக்க பேருந்துகளுடன் சாதாரண பயணி வண்டிகளும் இயக்கப்பட்டால் பயணிகள் பரவலாக பயணிப்பது சாத்தியமாகும். சமூக இடைவெளியும் நிறைவேறும். எனவே இந்த காரணத்துக்காக பயணி வண்டிகளை இயக்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கிராமப்புற மக்களுக்கு இது பாரபட்சம் காட்டுவதாகும்.
எனவே கிராமப்புற மக்களுக்கு உதவிட சாதாரண பயணி வண்டிகளை உடனே இயக்கிட கோருகிறேன். அத்துடன் சாதாரண மக்களுக்காக விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைத்து விடவும் கூறுகிறேன் என்று அவர் ரயில்வே அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி கூறியுள்ளதாகவும் சு. வெங்கடேசன் எம்.பி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications