காவி நிறம் என்ன இந்துக்களுக்கு சொந்தமானதா? பதான் பட சர்ச்சை குறித்து பரூக் அப்துல்லா அட்டாக்
டெல்லி: பதான் படத்தில் தீபிகா படுகோன் காவி நிறத்தில் ஆன உடையை அணிந்து கொண்டு கவர்ச்சியாக ஆடியிருப்பதற்கு இந்துத்வா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தனது அதிருப்தியை பதிவு செய்து இருக்கிறார்.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள திரைப்படம் பதான்.
இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்க்கு வர உள்ளது. இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

பதான் திரைப்படம்
இந்தப் படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' அண்மையில் வெளியானது. இந்தப் பாடலை தற்போது வரை 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் காட்சியில் இடம் பிடித்துள்ள சில காட்சிகள் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. பாடலில் படு கவர்ச்சியாக நடனம் ஆடும் தீபிகா படுகோன் காவி நிறத்திலான ஆடையை அணிந்து இருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணம். ஷாருக்கானுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் ஆடும் தீபிகா படுகோன் காவி நிறத்திலான ஆடையை அணிந்து கொண்டு இப்படி ஆடலாமா? என்ற சர்ச்சைகள் கிளம்பின.

இந்துத்வா ஆதரவாளர்கள் எதிர்ப்பு
இந்துக்களின் புனித நிறமான காவி நிறத்திலான ஆடையை அணிந்து கொண்டு தீபிகா படுகோனே கவர்ச்சியாக ஆடியதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சாதுக்கள், சாமியார்கள் அணியும் காவி நிற உடையை அணிந்து கொண்டு தீபிகா படுகோனே இப்படி கவர்ச்சியாக ஆடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக இந்துத்வா ஆதரவாளர்கள் கூறி படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சில பாஜக அமைச்சர்களும் இந்தபடத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

பரூக் அப்துல்லா ஆதரவு
படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்திற்கு தடை விதிக்க நேரிடும் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்து இருந்தார். படத்திற்கு இந்துத்வா அமைப்புகள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா 'பதான்'படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது: -

காவி நிறத்திலான உடை அணிந்ததால்
ஷாருக்கானின் புதிய படமான பதானில் காவி நிறத்திலான உடை அணிந்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. இதன் மூலம் காவி நிறம் இந்துக்களுக்கும் பச்சை நிறம் முஸ்லீம்களுக்கும் சொந்தமானது என்று அர்த்தமா என்ன? என்னது இது? பசு இந்துக்களுக்கு சொந்தமானது... எருது முஸ்லீம்களுக்கு சொந்தமனாதா? இந்தியாவில் வெறுப்புணர்வு அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவது தீர்வாக அமையாது. நாம் ஒற்றுமையாக இருந்து இந்த வெறுப்புணர்வை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த நாடு வாழ வேண்டும் என்றால் நாம் அனைவரும் சகோதரத்துத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

பரூக் அப்துல்லா பதில்
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏபி சித்திக் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தனது பிள்ளைகளை வெளிநாட்டில் வேலை பார்க்குமாறும் வாய்ப்பு கிடைத்தால் அங்கே குடியுரிமையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருப்பதாக பேசியிருந்தார்". இவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா இவ்வாறு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications