என்னது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் சாகவில்லையா? மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி அமைச்சர்
டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறான தகவல் என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் சாலைகளில் விழுந்து உயிரிழந்தது குறித்தும், மருத்துவமனைகளில் உயிரிழந்தது குறித்தும் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள் .
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகளில் 2.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு- மத்திய அரசு
ஆக்சிஜன் சப்பளை
அப்போது அவர் கூறும் போது, "கொரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. முதல் அலையின்போது சராசரியாக 3,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் 2-வது அலையில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனாலும், ஆக்சிஜன் சப்ளையைச் சீராக மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து வழங்கியது.
யாரும் இறக்கவில்லை
சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை. உயிரிழப்பு குறித்து எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வெளியிட்டு இருந்தது. அதன்படி பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த உயிரிழப்பும் மாநிலங்களில் நிகழவில்லை" என்று கூறினார்.
பலர் உயிரிழப்பு
இதனிடையே ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் சாகவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறான தகவல் என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது. நாட்டின் தலைநகரான டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
மீடியாக்கள்
ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என்றால் , ஏன் நீதிமன்றங்களை நாடினோம். ஏன் மீடியாக்கள் தினமும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து குரல் எழுப்பின. தொலைக்காட்சி சேனல்கள் ஏன் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் துடிப்பதாக வீடியோக்களை காட்டின. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சொல்வது முற்றிலும் தவறானது என்றார்.