செகண்ட் வேவ் போல்.. 3வது அலையும் கடுமையாக இருக்கும்.. 98 நாட்கள் நீடிக்கும்.. ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இரண்டாவது அலை போல கடுமையானதாக இருக்கலாம் என்றும் சராசரியாக 98 நாட்கள் நீடிக்கும் என்றும் எஸ்பிஐ ஈகோவ்ராப் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இருப்பினும், தடுப்பூசிகளை அதிகரிப்பதன் மூலமும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் கோவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,32,788 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் அதன் நேர்மறை விகிதம் 6.57 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 7 ஆம் தேதி இந்தியா கொரோனா பாதிப்பின் உச்சநிலையை சந்தித்தது. அதன்பிறகு தினசரி பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 69 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை உருவானால் அந்த அலை 2வது அலையைப் போல் கடுமையாக இருக்கும் என்றும் சராசரியாக 98 நாட்கள் நீடிக்கும் என்றும் எஸ்பிஐ ஈகோவ்ராப் தெரிவித்துள்ளது
98 நாட்கள் நீடிக்கும்
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஐந்து பக்க அறிக்கையில், வளர்ந்த நாடுகளுக்கான மூன்றாவது அலையின் சராசரி காலம் 98 நாட்கள் இருந்தது. இரண்டாவது அலை 108 நாட்களாக இருந்தது. தற்போது மூன்றாவது அலை 98 நாட்கள் ஆக குறையும்.. மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாடு சிறப்பாக தயாராக இருந்தால், "தீவிர தொற்று வீதத்தின் வீழ்ச்சி (ஆக்ஸிஜன், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் போன்றவை தேவைப்படும் நோயாளிகள்) குறைவான இறப்புகளுக்கு வழிவகுக்கும்.
குறைக்க முடியும்
மூன்றாவது அலைகளில் கடுமையான தொற்றுகள் 20 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துவிட்டால் (சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான தடுப்பூசி காரணமாக), மூன்றாவது அலைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக 40,000 ஆகக் குறையும்.
வளர்ந்த நாடுகள்
மூன்றாது அலையில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் எனவே தடுப்பூசிக்கு முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டும். 12-18 வயது வரம்பில் சுமார் 150-170 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். வளர்ந்த நாடுகள் பின்பற்றியதைப் போன்ற ஒரு மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதலுக்கு இந்தியா செல்ல வேண்டும்," என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கோடி தடுப்பூசி
தற்போது கொடிய இரண்டாவது அலை குறைந்த வருவதால் தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசுகள் விரைவுபடுத்தி உள்ளன. ஆனால் போதிய அளவில் தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் போதிலும், ஜூலை நடுப்பகுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி மக்கள் வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் இருக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது,
தீவிர வடிவம்
ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி அதிகரித்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் முழு நாட்டிற்கும் தடுப்பூசி போடுவோம் என்று நம்புகிறோம்" என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று இதுவரை குழந்தைகளிடையே தீவிரமான வடிவத்தை எடுக்கவில்லை என்றாலும், வைரஸ் நடத்தை அல்லது தொற்றுநோயியல் இயக்கவியலில் மாற்றம் ஏற்பட்டால் அதன் தாக்கம் அவர்களிடையே அதிகரிக்கக்கூடும் என்று என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் (உடல்நலம்) வி.கே. பால் எச்சரித்துள்ளார்.