'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக.. இடிக்கப்படவுள்ள புராதன சின்ன கட்டிடங்கள்.. அறிஞர்கள் எதிர்ப்பு!
டெல்லி: மத்திய 'சென்ட்ரல் விஸ்டா' திட்ட கட்டுமான பணிக்காக புராதன கட்டிடம் இடிக்கப்பட உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இ-பதிவு இல்லாத வாகனங்களை வந்த வழியே திருப்பியனுப்பும் போலீஸ்.. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு
தலைநகர் டெல்லியில் தற்போது இருக்கும் நாடளுமன்ற கட்டிடத்துக்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மத்திய அரசு கட்டி வருகிறது.
ரூ.20,000 கோடி
'சென்ட்ரல் விஸ்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துடன் மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் பிரதமருக்கான வீடுகள், முக்கிய துறைகளுக்கான அலுவலகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன. 'சென்ட்ரல் விஸ்டா'திட்டத்தின் மதிப்பு ரூ.20,000 கோடி என்று கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்தியாவில் தற்போது கொரோனா ஆதிக்கம் இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் தினம், தினம் உயிர்கள் பறிபோகின்றன. நாட்டின் சுகாதாரத்துறைக்கு போதிய நிதி இல்லாத நிலையில் 'சென்ட்ரல் விஸ்டா' தேவைதானா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பயன்படுத்தப்படும் நிதியை சுகாதாரத்துறைக்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புராதன கட்டிடம் இடிக்கப்படுகிறது
இந்த நிலையில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக டெல்லியில் உள்ள புராதன நினைவு கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது தேசிய அருங்காட்சியகம், இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஎன்சிஏ), தேசிய ஆவணக்காப்பகத்தின் இணைப்பு கட்டிடம் ஆகியவை இடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அரிய பொருள்கள்
இதையும் சேர்த்து சாஸ்திரி பவன், கிருஷி பவன், விஜியன் பவன், துணை குடியரசுத் தலைவர் குடியிருப்பு, ஜவஹர் பவன் உள்பட மொத்தம் 4,58,820 சதுர மீட்டர்.பரப்பளவு உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற அரிய சிலைகள், சிற்பங்கள், விலைமதிப்பற்ற நாணயங்கள், ஓவியங்கள் மற்றும் பழங்கால நகைகள் உள்ளன. மேலும் வெண்கலத்தில் நடராஜார் சிலை புத்தரின் நினைவுச்சின்னங்கள், தஞ்சை ஓவியங்கள் உள்ளன. இவை அனைத்தும் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அபாய நிலை
தேசிய ஆவணக்காப்பகத்தின் பிரதான கட்டிடம் அப்படியே இருக்கும். இணைப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும். இங்கு வைக்கப்பட்டுள்ள காப்பக பதிவுகளில் 45 லட்சம் கோப்புகள், 25,000 அரிய கையெழுத்துப் பிரதிகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்கள் மற்றும் 1.3 லட்சம் முகலாய ஆவணங்கள் உள்ளன. ஆவணங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது இவற்றில் பல மயமாகும் அபாயம் உள்ளன.
அறிஞர்கள் வேண்டுகோள்
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் பாரம்பரிய துண்டு பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பழமைவாய்ந்த நூலகம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. புராதன சின்னங்கள் கொண்ட கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 70-க்கு மேற்பட்ட அறிஞர்கள் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.