பெகாசஸ் விவகாரம்: இதுக்கு பதில் சொல்லுங்கள்.. மத்திய அரசிடம் 2 கேள்விகள் எழுப்பிய ப.சிதம்பரம்!
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் அளித்த பதிலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் என்ற ஸ்பைவேர் ஒட்டுகேட்பு விவகாரம்தான் இந்தியா முழுவதும் பட்டிதொட்டி எங்கும் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பேச்சாக இருந்தது.
இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு, ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பெகாசஸ் விவகாரம்
இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அப்படியே கையில் எடுத்துக் கொண்டன. கடந்த சில வாரங்களாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கினார்கள். குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவே கண்ணீர் விடும் அளவுக்கு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர் எதிர்கட்சிகள். மேலும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?
விசாரணை நடத்துவதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? ஏன் ஓடி ஒளிகிறார்கள்? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டினார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக பாதிக்கப்பட்டு யாரேனும் புகார் அளித்துள்ளார்களா? என்று மனு தாக்கல் செய்தவர்களிடம் உச்சநீதிமன்றம் கேட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் விவாதங்களை நடத்துவதை விட்டுவிட்டு நீதிமன்றத்தை நம்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர்.

பொதுவெளியில் வெளியிட முடியாது
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். வெளியிட முடியாது. 'பெகாசஸ் போன்ற உளவுமென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொதுவெளியில் பிரமாணப்பத்திரம் மூலம் வெளியிட முடியாது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது மற்றும் எதிரிநாடுகள், தீவிரவாதச் செயல்கள் போன்றவை இருப்பதால் இந்த மென்பொருள் குறித்து வெளியில் தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்
இந்த நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறிய பதிலை வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பகிரங்கமாக வெளியிட முடியாத தகவல் அரசாங்கத்திடம் உள்ளது என்று சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

கேள்விக்கு பதில் தேவை
ஸ்பைவேர் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காக மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது. அந்த ஸ்பைவேர் மென்பொருள் பெகாசஸ் என்று அழைக்கப்படுகிறதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். மேலும் அது எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது? இந்த இரு கேள்விகளுக்கும் மத்திய அரசு பதில் அளித்தால், மற்ற கேள்விகளுக்கான பதில் சரியான நேரத்தில் பதில் அளிக்கும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications