காங்கிரஸை பலவீனப்படுத்த மோடியின் பி டீமாக செயல்படுகிறார் மமதா பானர்ஜி- காங். பொளேர் அட்டாக்
டெல்லி: காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பிரதமர் மோடியின் துணையுடன் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி சாடியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சென்ற மமதா பானர்ஜி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மமதா, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை என்றார்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
மேலும் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளில் இருப்பது அரசியலுக்கு பயன்படாது; அரசியலில் எப்போதும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் சாடி இருந்தார். அத்துடன் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏன் கோவா தேர்தலில் போட்டியிடக் கூடாது எனவும் மமதா கேள்வி எழுப்பினார்.
மமதா, சரத்பவார் நிலைப்பாடு
மமதா பானர்ஜியைப் பொறுத்தவரை காங்கிரஸை தவிர்த்துவிட்டு மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக உள்ளார். மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டாலே பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என்பது மமதாவின் கருத்து. ஆனால் சரத்பவாரோ, காங்கிரஸ் மட்டுமல்ல.. எந்த ஒரு எதிர்க்கட்சியையும் நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை.. அனைவரும் இணைந்தே பாஜகவை வீழ்த்துவோம் என்கிறார்.
காங். சாடல்
மமதாவின் காங்கிரஸுக்கு எதிரான இந்த நிலைப்பாடு அக்கட்சியின் மூத்த தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறியதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பது மமதாவுக்கு தெரியாதா என்ன? இந்தியா முழுவதும் மமதா, மமதா என முழங்குவதாக மமதா பானர்ஜி நினைத்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கம்தான் இந்தியா என்று நினைக்கக் கூடாது. 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 பேர் அமைச்சர்களாக இருந்தார்களே.. மமதாவுக்கு இது தெரியாதா?
மோடியின் ஆதரவு
மமதா பானர்ஜியின் பலம் இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் ஆதரவுதான். அதனால்தான் காங்கிரஸை பலவீனப்படுத்தும் அத்தனை நடவடிக்கைகளையும் மமதா பானர்ஜி மேற்கொண்டு வருகிறார். மமதாவின் இந்த முயற்சிகள் பலனளிக்காது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறினார்.
கபில்சிபல் கருத்து
மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறுகையில், காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பது ஆன்மா இல்லாத உடலுக்கு சமம். எதிர்க்கட்சிகள் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் வெளிப்படுத்தும் என்றார். மகாராஷ்டிரா அமைச்சர் பாலாசாகேப் தோரட் கருத்து தெரிவிக்கையில், பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக காங்கிரஸ் எப்படி போராடிக் கொண்டிருக்கிறது என்பதை நாடு நன்கு அறியும். பாஜகவை எதிர்த்து ஒரே ஒரு கட்சியால் போராட முடியாது. ராகுல் காந்தியை விமர்சிப்பது என்பது தனிபட்ட ஆதாயங்களுக்காக மட்டும்தான் என்றார்.