வேகமெடுக்கும் தடுப்பூசி உற்பத்தி..2ஆவது வேக்சினாக ஸ்புட்னிக் வி-ஐ.. தயாரிக்க விரும்பும் சீரம்
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி கோரி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தடுப்பூசிகள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவிலும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது.
சீரம் விண்ணப்பம்
டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தைத் தவிரவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி பல்வேறு இந்திய நிறுவனங்களுடன் செய்ய ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி கோரி மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் இந்த விண்ணப்பம் குறித்து மத்திய அரசு வரும் நாட்களில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்புட்னிக் வி
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி. உலகிலேயே முதல் தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சுமார் 92% வரை தடுப்பாற்றலை தருகிறது. அதேபோல ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யக் குறைந்த செலவே ஆகும். மேலும், சாதாரண ஃப்ரிட்ஜ்யிலேயே சேமித்து வைக்கலாம் என்பதால், இந்தத் தடுப்பூசியை அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரம் நிறுவனம்
உலகில் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமாக சீரம் உள்ளது. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு விநியோகிக்க வேண்டியது சீரம் நிறுவனத்தின் பொறுப்பாகும். முன்னதாக வரும் ஜூன் மாதம் முதல், மாதம்தோறும் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் உற்பத்தி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.