கொரோனா தடுப்பூசி.. விரைவில் மத்திய அரசுடன் சீரம் ஒப்பந்தம்.. விலை என்ன தெரியுமா? அதிகம் இல்லை பாஸ்
டெல்லி: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான, புனேவைச் சேர்ந்த, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்.ஐ.ஐ), கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசுடன் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது அந்த நிறுவனம். இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை என்னவாக இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
"விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான பேச்சுக்கள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன, விரைவில் உறுதி செய்யப்படலாம்" என்று மருந்து நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி- 90 வயது மூதாட்டிக்கு முதலில் செலுத்தப்பட்டது!
தடுப்பூசி விலை என்ன தெரியுமா?
அரசு வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார் என்கிறது அந்த நாளிதழ். இந்த மருந்து ஒரு டோஸ் விலை 250 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீரம் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் மருந்து அளவுகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை.
அவசர பயன்பாடு
அதேநேரம், சீரம் நிறுவனத்திடமிருந்து, சுமார் 60 மில்லியன் மருந்துகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்று செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனவரி-பிப்ரவரி மாதத்திற்குள், இந்திய அரசு, குறைந்தது 100 மில்லியன் டோஸ்கள் கொள்முதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், "வாக்குறுதியளித்தபடி, 2020 இறுதிக்குள், எங்கள் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியான கோவிஷீல்டிற்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இது எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும், இந்த ஆதரவுக்கு இந்திய அரசு மற்றும் நரேந்திர மோடிக்கு நன்றி கூறுகிறேன். " என்று தெரிவித்திருந்தார்.
பல தடுப்பூசிகள்
இதுவரை, சீரம் 40 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை தயார் செய்துள்ளது, ஆனால் தேவை அதிகமாக இருக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் விநியோகிக்க கோவிஷீல்ட் மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளை Gavi மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 2021ம் ஆண்டில், டோஸ் ஒன்றுக்கு ரூ.250 விலையில் சீரம் நிறுவனம் வழங்க வேண்டும். ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனெகா நிறுவன தடுப்பூசி 1 பில்லியன் டோஸ் அளவுக்கு சீரம் உற்பத்தி செய்யும். அதில் 50 சதவீதம் இந்தியாவுக்கு ஒதுக்கப்படும்.
முதல் உரிமை
முதலில் அரசு சார்பில், சுகாதார ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் போன்றோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்த தடுப்பூசி மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் தனியார் சந்தையிலும் கிடைக்கும், ஆனால் அதன் விலை சற்று அதிகம். பூனவல்லா இதுபற்றி கூறுகையில், தனியார் சந்தையில் ஒரு டோஸ் சுமார் 500-600 ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும்.