தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.. மோடியுடன் திடீர் சந்திப்பு.. ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒருமணி நேரம் நீடித்ததாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்று சரத்பவார் கூறிய நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் புதிய அணியை உருவாக்க சரத்பவார் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக சரத்பவார் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று பரவலாக பேச்சு எழுந்தது. மேலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே சரத்பவாரை மையமாக வைத்து பல்வேறு யூகச் செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

குடியரசுத்தலைவர் தேர்தல்
குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என்ற செய்திகள் வெளியாகின. அப்போதே குடியரசுத்தலைவர் தேர்தலில் சரத்பவாரை முன்னிறுத்த பாஜக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறதா என்கிற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எதையும் வெளிப்படையாக கூற முடியாது என்று கூறி நழுவி விட்டார்.

மறுத்த சரத்பவார்
இந்த சூழ்நிலையில்தான் குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டியளித்தார் சரத்பவார். குடியரசுத்தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன் என்கிற தகவலில் உண்மையே இல்லை. 300 எம்.பி.க்களை கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு எதிராக போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என எனக்கு நன்றாகவே தெரியும். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் நான் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

எதுவும் பேசவில்லை
பிரசாந்த் கிஷோர் என்னை 2 முறை சந்தித்து பேசினார். அப்போது அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே பேசினோம். 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தலைமை குறித்தோ குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்தோ நாங்கள் எதுவுமே பேசவே இல்லை. என்று தெரிவித்த அவர் தேர்தல் வியூகப் பணிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாகவே என்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

கூட்டணிக்கு தலைமையில்லை
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மாறக் கூடும். 2024 லோக்சபா தேர்தலுக்கான எந்த கூட்டணிக்கும் நான் தலைமை ஏற்கப் போவதும் இல்லை என்றும் சரத்பவார் கூறியிருந்தார்.

மோடி சரத் பவார் சந்திப்பு
இந்த சூழ்நிலையில் இன்று காலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் சரத்பவார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்துள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சரத்பவார் கூறிய நிலையில் நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விளக்கம் அளித்த ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. சீன எல்லையில் தற்போதைய நிலை குறித்து ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தும் முயற்சியாகவே ராஜ்நாத் சிங் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் சரத்பவார், ஏ.கே. ஆண்டனி ஆகியோரிடம் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி சரத்பவார் சந்திப்பு தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications