100 நாள் வேலை..! மத்திய அரசு ஒதுக்கிய நிதி காலி! சம்பளம் கொடுக்க முடியாமல் தடுமாறும் மாநிலங்கள்!
டெல்லி: ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த முடியாத அளவுக்கு நடப்பு நிதியாண்டின் பாதியிலேயே நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் வரை நிதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கூடுதலாக பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) திட்டத்தின் நிகர நிதி இருப்பு மைனஸ் 8,686 கோடி ரூபாயில் உள்ளது.
அதாவது, ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு தேவையான இடு பொருட்கள் வாங்குவது, ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்கான ஊதியம் போன்றவை தாமதம் ஆகும் என்பதே இதன் அர்த்தம். இந்த நிலையை தவிர்க்க வேண்டுமானால், மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியை ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.

11 கோடி தொழிலாளர்களுக்கு பலன்
நாட்டில் பணப் புழக்கம் இல்லாத நிலையில், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் தர தாமதமானால் அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்பது, விரும்பும் எந்த கிராமப்புற குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கடந்த ஆண்டு கோவிட்-19 லாக்டவுனின் போது, இந்தத் திட்டத்திற்கு அதுவரை இல்லாத அதன் அதிகபட்ச பட்ஜெட்டாக ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. 11 கோடி தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ஒரு முக்கியமான உயிர்நாடியாக விளங்கியது.

21 மாநிலங்கள் மோசம்
இருப்பினும், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட் வெறும் ₹73,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, நாடு தழுவிய லாக்டவுன் முடிந்துவிட்டதாகவும், பணம் தீர்ந்துவிட்டால் கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடுகள் கிடைக்கும் என்றும் மத்திய அரசு கூறியது. அக்டோபர் 29 ஆம் தேதி நிலவரப்படி, செலுத்த வேண்டிய தொகைகள் உட்பட மொத்தச் செலவினம் ஏற்கனவே ₹79,810 கோடியை எட்டியுள்ளது. இது ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தைச் செயலிழக்கச் செய்துள்ளது. ஏற்கனவே, 21 மாநிலங்கள் எதிர்மறையான நிகர நிதி இருப்பைத்தான் காட்டுகின்றன. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

செலவு யார் செய்வார்கள்
"ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் இந்த வருடத்தின் பாதியிலேயே நிறுத்தப்படும் சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். செலவை யார் ஏற்கப் போகிறார்கள் என்பது இப்போதுள்ள கேள்வியாக மாறியுள்ளது? கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தாலும், ஊரடங்கு அறிவிப்புகளாலும், ஏற்கனவே நசுக்கப்பட்ட பொருளாதாரம் இன்னும் பாதிப்படைய வாய்ப்புள்ளது" என்று மஸ்தூர் கிசான் சக்தி சங்கதனின் நிறுவனர் நிகில் டே ஆதங்கத்தோடு தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் 2016ம் ஆண்டு தீர்ப்பில் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணம் நிலுவையில் வைக்கப்படுவது "அரசு செய்த தெளிவான அரசியலமைப்பு மீறல்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் நிகில் டே. ஜிஎஸ்டி வரி விதிப்பு வந்த பிறகு, மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரம் குறைந்து விட்டது. எனவே, மாநில அரசால் இந்த நிலுவை தொகைகளை செலுத்துவது கஷ்டமாகும்.

விரும்புவோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை
ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், வேலை கோரிய 13% குடும்பங்களுக்கு இவ்வாண்டு பணி வழங்கப்படவில்லை என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. "இந்த புள்ளிவிவரங்கள் கூட குறைத்து மதிப்பிடப்படுகின்றன, ஏனெனில் கணினியில் பதிவு செய்யப்பட்ட தேவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலையைக் கோரும் போது, அவர்களின் கோரிக்கை பதிவு செய்யப்படாமல், அதிகாரிகளால் வெறுமனே திருப்பி அனுப்பப்படுகிறார்கள், "என்று வேலைவாய்ப்பு உத்தரவாதத்திற்கான மக்கள் நடவடிக்கையின் ஆராய்ச்சியாளர் விஜய் ராம் கூறியுள்ளார். அப்படியானால் எவ்வளவு தூரம் குறைந்த அளவுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டது, மேலும் அதற்கும் நிதி ஒதுக்கவில்லை என்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications