ஜாமீனா.. இதோ அடுத்த வழக்கு! 2 ஆண்டாக சிறையில் வாடும் சித்திக் கப்பான்.. அரெஸ்ட் செய்த அமலாக்கத்துறை
டெல்லி: 2 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது தலி பெண் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்திய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக உத்தர பிரதேச அரசு செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் பெண்ணின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஹத்ராஸ்.. 2 வருடங்களுக்கு பின் பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
ஹத்ரஸ் கொடூரம்
மறுபக்கம் காவல்துறையோ, பெற்றோரின் அனுமதி இன்றி இரவோடு இரவாக பெண்ணுக்கு இறுதிச் சடங்கை செய்து முடித்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஹத்ரஸில் பெண்ணின் குடும்பத்தார்களை சந்திக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் அங்கு சென்றதால் இவ்விவகாரம் தேசிய கவனத்தை ஈர்த்தது.
சித்திக் காப்பான்
இந்த வழக்கு தொடர்பாக பல மாநிலங்களில் இருந்து பல ஊடகங்களை சேர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க ஹத்ரஸுக்கு சென்றனர். அவர்களில் ஒருவராக கேரளாவை சேர்ந்த சித்திக் கப்பான் என்ற செய்தியாளர் உத்தர பிரதேசத்துக்கு சென்றார். டெல்லி வசித்து வந்த சித்திக் காப்பான் ஹத்ரஸ் செல்லும் வழியிலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்
சிறை தண்டனை
அவர் மீது தேச விரோத வழக்கு, மத வன்முறையை தூண்டும் வழக்கு என்று பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சித்திக் காப்பான் தொடர்ந்த வழக்குகள் பலமுறை நிராகரிக்கப்பட்டன. சித்திக் காப்பான் சிறையில் இருக்கையிலேயே அவரது தாயாரும் உயிரிழந்தார்.
ஜாமீன்
இவரது ஜாமீன் மனுவை லக்னோ உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இவரது வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திடம் பேட்டி எடுக்க இவர் சென்றது குற்றமா? என்று கேள்வி எழுப்பி ஜாமீன் வழங்கினர்.
சிறையில் சித்திக்
சித்திக் காப்பான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கும் நிலையில், அவர் இன்னும் சிறையிலிருந்தே விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சித்திக் காப்பான் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்து இருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து வருவதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.