வேக்சின் பலன் அளிக்கிறதா? பல நாடுகளில் மீண்டும் உயரும் கொரோனா.. 3ஆம் அலையின் தொடக்கமா..முக்கிய தகவல்
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை பல மாதங்களாகக் கட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும்கூட வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அடுத்த அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்,
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளிலும் முக்கிய பிரச்சினை என்றால் அது கொரோனா வைரஸ் தான். அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது.
தடுப்பூசி பணிகள் பல்வேறு நாடுகளிலும் தொடங்கப்பட்ட போதிலும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை என்பதால் வேக்சின் பற்றாக்குறை தொடர்கிறது.
ராஜினாமா செய்ய ரெடியாகும் எடியூரப்பா- எந்த ஜாதிக்கு கர்நாடகா புதிய முதல்வர் பதவி? பரபரக்கும் பாஜக
கொரோனா வேக்சின்
அதாவது பணக்கார வல்லரசு நாடுகளுக்கு எளிதாக வேக்சின் கிடைத்தது. ஆனால் மற்ற வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு போதியளவில் வேக்சின் கிடைக்கவில்லை. இது மிகப் பெரிய ஏற்றத்தாழ்வாக உருவாகியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வேக்சின் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை சுமார் 55% இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போட்டுக்கொண்டுள்ளன.
பிரிட்டன் தடுப்பூசி பணிகள்
பிரிட்டன் நாட்டில் வேக்சின் பணிகள் அதைவிட வேகமாக நடைபெறுகிறது. மக்கள்தொகையில் ஒப்பிட்டளவில் குறைவாக உள்ளதாலும், தடுப்பூசி பணிகளை மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக விரைவில் தொடங்கியதாலும் அங்கு 18+ மேற்பட்டவர்களில் சுமார் 90% இளைஞர்களுக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 3.6 கோடி பேர், சுமார் 75% இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர்.
கொரோனா 3ஆம் அலை
இந்த நாடுகளில் இத்தனை காலமாக கொரோனா பாதிப்பு குறைந்தே இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக அங்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் தினசரி வைரஸ் பாதிப்பு கடந்த 3 வாரங்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல பிரிட்டன் நாட்டிலும் ஒரே வாரத்தில் 40% வரை வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இவை தவிர இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது கொரோனா அடுத்த அலைக்கான ஒரு தொடக்கமாக இருக்குமோ எனப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்
டெல்டா கொரோனா
ஆனால், இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானதாக உள்ளது. முதலாவது உருமாறிய டெல்டா கொரோனா. இந்தியாவில் 2ஆம் அலை சமயத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா இப்போது 100 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வேக்சின்கள் டெல்டா கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தினாலும், கொரோனாவுக்கு எதிராக இதன் செயல்திறன் குறைகிறது. இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவே செய்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் தற்போது டெல்டா கொரோனா கேஸ்களே அதிகரித்துள்ளன.
ஊரடங்கு தளர்வுகள்
மற்றொரு காரணம் தளர்வுகள், அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் போட்டுள்ளதால் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தளர்வுகளை அறிவித்துள்ளன. இவையும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். பிரிட்டன் நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும், அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் போட்டுள்ளதால் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவே ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா
மறுபுறம் ஆஸ்திரேலியாவும் கொரோனாவை சிறப்பாகவே கட்டுக்குள் வைத்திருந்தது. தீவிரமான ஊரடங்கின் மூலம் அது வைரஸ் பாதிப்பை குறைந்திருந்தது. ஆனால், வேக்சின் பற்றாக்குறை காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி பணிகள் அங்கு நடந்தது. இப்போது அங்கு மிக வேகமாக கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
வேக்சின் மிக முக்கியம்
சுருங்கச் சொன்னால் டெல்டா கொரோனா மற்றும் தளர்வுகளால் உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் வேக்சின் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட நாடுகளில் வைரசின் பாதிப்பு குறைவாக உள்ளது. ஆனால் வேக்சின் பணிகளில் முனைப்புக் காட்டாமல், ஊரடங்கு மூலம் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்திய நாடுகளில் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.