களேபரம்.. டெல்லியில் மீண்டும் போராடிய காங்கிரஸ் எம்பி-தொண்டர்கள்.. குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று 3வது நாளாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

சோனியாவிடம் விசாரணை
இதுதொடர்பாக கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் 5 நாள் விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 21ம் தேதி முதல் முறையாக சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜரானார். 3 மணிநேரம் அவரிடம் விசாரிக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று 2வது நாளாக 6 மணிநேரமும் விசாரிக்கப்பட்டது.

3வது முறையாக விசாரணை
இதன் தொடர்ச்சியாக சம்மன் வழங்கப்பட்டதால் இன்று 3வது முறையாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்பு காலை 11 மணிக்கு சோனியா காந்தி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர். வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.

இன்றும் தொடர்ந்த போராட்டம்
இதற்கிடையே தான் மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சோனியா காந்தி, ராகுல்காந்தியை அச்சுறுத்துகிறது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தும்போதெல்லாம் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார், பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்தது.

ராகுல்-தொண்டர்கள் போராட்டம்
அந்த வகையில் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். மேலும், நாடாளுமன்றத்தின் வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களான ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்கள் பதாகைகள் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்பிக்கள் கைது
மேலும் சில எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேனர் பிடித்து கொண்டு ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது பாதிவழியில் அவர்களை போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்வலம் சென்ற எம்பிக்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications