மூத்த அதிருப்தி தலைவர்கள் உடன் இன்று சோனியா மீட்டிங்.. முக்கிய ஆலோசனை.. காங்கிரசில் என்ன நடக்கிறது?
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் கிளர்ச்சி செய்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த சில வாரங்களாக தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பதற்கான விவாதங்கள் தற்போது கட்சிக்குள் எழுந்துள்ளது. சில வாரங்கள் முன் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 23 பேர் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
காங்கிரஸ் தலைமை வலிமையாக இல்லை, வலிமையான, துடிப்பான தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக தேர்தல் நடத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு : கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி - இடைத்தேர்தல் எப்போது
விரைவில் தேர்தல்
இதன் காரணமாக கட்சிக்குள் பெரிய பூகம்பமே வெடித்தது. இதையடுத்து நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிப்பார். அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். இதற்காக கட்சிக்குள் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.
கடிதம் புறக்கணிப்பு
இந்த நிலையில் கட்சியின் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய குலாம் நபி அசாத், கபில் சிபல் உட்பட 23 தலைவர்களுக்கு எதிராக கட்சியில் காய்கள் நகர்த்தப்படுகிறது. பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று புகார் உள்ளது. இப்படி காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் கிளர்ச்சி செய்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க உள்ளார்.
யார் எல்லாம்?
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி அசாத், ஆனந்த் சர்மா போன்ற அதிருப்தி தலைவர்கள் உடன் சோனியா காந்தி சந்திப்பு நடத்த உள்ளார். பாராளுமன்ற கூட்டம் தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பாக ஆலோசனை நடக்கும் என்று கூறுகிறார்கள். பாராளுமன்ற கூட்டத்தொடரை மனதில் வைத்தே கூட்டம் தொடங்க உள்ளது. அதேபோல் ஜிடிபி வீழ்ச்சி, பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் நீக்கம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளனர்.
என்ன பேசுவார்கள்
ஆனால் இன்னொரு பக்கம் அடுத்த தலைவருக்கான தேர்தல் குறித்தும் இதில் முக்கியமான ஆலோசனைகளை செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த முறை நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது.