தென்மேற்கு பருவ மழை... இந்த ஆண்டு எப்படி இருக்கும்? - இந்திய வானிலை மையம் கணிப்பு
நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் 50% கோடைகால பயிர்களாகவே உள்ளன. அவை பருவமழையையே சார்ந்திருக்கின்றன. அதனாலேயே விவசாயிகள் பருவமழை கணிப்பை ஆண்டுதோறும் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் அபரிமிதமாகவே பெய்து நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. மழை நன்றாக பெய்தால்தான் விவசாயம் செழிக்கும் பொருட்களின் விலைவாசி குறையும். எனவே மழையை அதிக அளவில் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.

தென்மேற்குப் பருவமழை
இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழை மூலமே கிடைக்கும். இந்த தென்மேற்கு பருவமழையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும். இந்த நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சராசரி மழை அளவு
இதன்படி தெற்கு மேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 % முதல் 104 % வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 99 சதவிகிதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 சதவிகிதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு என்பது 1971-2020 கால கட்டத்தின் அடிப்படையில் 868.6 மி.மீட்டராக உள்ளது. நடப்பாண்டு மழை பற்றிய அறிவிப்பு வரும் மே மாதம் வெளியாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம்
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ம்ருதஞ்சய் மொஹாபத்ரா, "ஐஎம்டி கணிப்பு பெரும்பாலும் துல்லியமாகவே இருந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான கணிப்புகள் மட்டுமே முன்பின்னாக இருந்துள்ளன என்றார். தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட்டும், இந்த ஆண்டு இயல்பான அளவிலேயே மழை பெய்யும் என்று கணித்துள்ளது. நீண்ட கால மழை சராசரியின்படி 98% மழை பெய்யலாம் என்று கணித்துள்ளது. 96% முதல் 106% வரையிலான மழை பதிவு இயல்பான மழைப்பதிவு என்று கணிக்கப்படுகிறது.

பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
இந்திய மக்களின் வருமானத்தில் பாதியளவு விவசாயம் சார்ந்தே உள்ளது. ஆனால் 40% விளைநிலங்கள் சரியான போதிய பாசன நீர் இன்றி தவிப்பில் உள்ளது. அதேபோல், இந்தியாவின் வேளாண் உற்பத்தியில் 50% கோடைகால பயிர்களாகவே உள்ளன. அவை பருவமழையையே சார்ந்திருக்கின்றன. அதனாலேயே விவசாயிகள் பருவமழை கணிப்பை ஆண்டுதோறும் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications