இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி.. வல்லுநர் குழு பரிந்துரை
டெல்லி: இன்று நடைபெற்ற மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மேலும், சில மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி
இந்தச் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து விரைவில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. இதைப் பரிசீலனை செய்த வல்லுநர் குழு இது தொடர்பாகக் கூடுதல் தரவுகளைக் கேட்டிருந்தது.
முக்கிய ஆலோசனை
மேலும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏதேனும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து மருத்துவ சோதனை முடிவுகளை டாக்டர் ரெட்டி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்தியது.
மூன்றாவது தடுப்பூசி
இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் அனுமதி அளிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி உள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் மாதத்திற்கு மேலும் 5 புதிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பாற்றல் எவ்வளவு
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனை ஐக்கிய அமீரகம், வெனிசுலா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 முதல் 99 வயதானவர்களுக்குத் தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி சுமார் 92 % வரை பலனளிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 10 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.