விரைவில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி? பல மாநிலங்கள் தீவிர ஆலோசனை.. லிஸ்டில் தமிழ்நாடும் இருக்கு
டெல்லி: டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில், அதை மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே நமது விரல் நுனியில் இருக்கிறது. மொபைலை எடுத்து 2 கிளிக் செய்தால் போதும் எந்த விஷயமாக இருந்தாலும் அவை வீடுகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படுகிறது.

மதுபானங்கள் டெலிவரி: இதற்கிடையே டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. ஸ்விகி, பிக் பாஸ்கட், ஜொமெட்டோ, பிளிங்இட் தளங்கள் மூலம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து இந்த மாநிலங்கள் ஆராய்ந்து வருகின்றன.
முதலில் குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர், ஒயின் போன்ற மதுபானங்களை டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுபோல ஹோம் டெலிவரியில் இருக்கும் நன்மை தீமைகள் குறித்து டெலிவரி தளங்கள் மற்றும் மதுபான ஆலைகளிடம் இருந்து மாநில அதிகாரிகள் கருத்துக் கேட்டு வருவதாகவும் இதில் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எதற்காக: இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "பெரிய நகரங்களில் வெளிநாட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே இந்த திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். மதுபான கடைகளில் வெளிநாட்டவர், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களால் மது வாங்க முடியாத நிலை இருக்கும் நிலையில், அவர்களுக்கும் இது உதவும்" என்றார். தற்போது, இந்தியாவில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மது ஹோம் டெலிவரி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டெலிவரி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், "ஆன்லைன் டெலிவரி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும். மைனர்கள் மது வாங்குவதை இது தடுக்கும். வயதை எங்களால் உறுதி செய்ய முடியும். மதுபான விற்பனைக்குத் தற்காலிகமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அவை முறையாக கடைப்பிடிப்பதை டெலிவரி நிறுவனங்கள் உறுதி செய்யும். இப்படிப் பல வழிகளில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வது நல்லது தான்" என்றார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இது குறித்த திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. இருப்பினும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் அவை அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலகட்டம்: கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், இப்போது இந்த மாநிலங்களில் பெரிய டெலிவரி நிறுவனங்கள் யாரும் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் டெலிவரிகள் தற்போது அனுமதிக்கப்படும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரீமியம் பிராண்டுகளின் விற்பனை 20-30% அதிகரித்துள்ளது. ஆன்லைனில் ஹோம் டெலிவரி செய்வதன் மூலம் மது விற்பனையை ஒழுங்குபடுத்த முடியும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இது தொடர்பாக மேலும் கூறுகையில், "ஆன்லைனில் மது விற்பனையை ஒழுங்குபடுத்த முடியும். eKYC, ஒருவரால் அதிகபட்சம் எவ்வளவு மது வாங்க முடியும், ஓடிபி என பல வழிகளில் இதை முறைப்படுத்தலாம்" என்று கூறுகின்றனர்.
இது தொடர்பான ஆலோசனையில் பல மாநிலங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இதில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications