துக்ளக் லாக்டவுன்... மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகளை கலாய்த்த ராகுல் காந்தி
டெல்லி : இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.17 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் நோய் பரவல் அதிகம் இருக்கும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பிறப்பிக்கப்பட்டு வருகிறது
|
துக்ளக் லாக்டவுன்
இந்நிலையில் மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கிண்டல் செய்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். இந்தியில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மத்திய அரசின் கோவிட் 19 யுக்திகள், முதல் நிலை - துக்ளக் லாக்டவுன் அமல்படுத்தியது, இரண்டாவது நிலை - மணியடிக்க சொன்னது, மூன்றாவது நிலை - கடவுளை புகழ்ந்து பாட சொன்னது என பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு கோரிக்கை
இதற்கு முன் இந்த வார துவக்கத்தில் கொரோனா பேரிடரை மத்திய அரசு கையாண்டு விதத்தை மிக கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளைப் போல் அதி விரைவாக தடுப்பு மருந்துகளை அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.

காங்கிரசாரும் பாதிப்பு
மோடி அரசின் பல நடவடிக்கைகளை துக்ளக் அரசுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் விமர்சித்து வந்தனர். தற்போது லாக்டவுனையும் துக்ளக் லாக்டவுன் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் இறப்பு விகிதம்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோவால் 1185 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,74,308 ஆக அதிகரித்துள்ளது. மிக வேகமாக கொரோனா பரவி வருவதால் பல மாநிலங்களில் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன்கள், மருந்துகள், கொரோனா தடுப்பூசி ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications