குடியுரிமை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள்; பாகிஸ்தானுக்கே திரும்பும் இந்து அகதிகள்!
டெல்லி: அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் இந்திய அரசு விதித்துள்ள கடுமையான விதிகளால் ஏராளமான பாகிஸ்தானிய இந்து அகதிகள் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பிரச்னைகளை எதிர்கொண்ட இந்துக்கள் சிலர் இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால் இந்தியாவில் குடியுரிமை வழங்குவது தொடர்பாக கடுமையான விதிகள் அமலில் உள்ள காரணத்தால் தற்போது இவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கே சென்றுவிட்டனர்.

திரும்பி செல்லும் இந்துக்கள்
'குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019' மத்திய அரசால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்படி சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக, கடந்த 2021 முதல் இந்த ஆண்டு வரை இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் இந்து அகதிகளில் சுமார் 1,500 பேர் பாகிஸ்தானுக்கே திரும்பி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

காரணம்
2022 ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் சுமார் 334 இந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டுக்கு மீண்டும் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த 'சிமண்ட் லோக் சங்கதன்' எனும் அமைப்பின் தலைவர் இந்து சிங் சோதா, "மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வரும் இந்துக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்குத் தேவையான சம்பிரதாயங்களை நிறைவேற்ற இந்த இந்துக்களில் பெரும்பாலானோரிடம் பண வசதி இல்லை. எனவே அவர்கள் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்" என கூறியுள்ளார்.

பழைய நிலையும் சமீபத்திய நிலையும்
மேலும், "இவ்வாறு பணத்தை செலவழித்தாலும் அதனை இவர்களால் திரும்ப பெற முடிவதில்லை. இந்திய குடியுரிமையை விரும்பும் பாகிஸ்தானிய இந்துக்கள் சுமார் 25,000 பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த பாகிஸ்தானிய இந்துக்கள் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக இங்கு உள்ளனர்" என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2004 மற்றும் 2005 காலகட்டங்களில் இவ்வாறு இந்தியா திரும்பிய பாகிஸ்தானிய இந்துக்களுக்கு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் சுமார் 13,000 பேருக்கு இந்தியாவில் வாழ குடியுரிமை வழங்கப்பட்டது.

புது பாஸ்போர்ட்
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 2,000 பாகிஸ்தானிய இந்துக்களுக்கு மட்டுமே இவ்வாறு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு குடியுரிமையை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் விதிப்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இடம்பெயர்ந்த இந்துக்கள் பெரும் தொகையைச் செலுத்த வேண்டும். அகதிகளின் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வேண்டும். பழைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்ததற்கான பாகிஸ்தான் தூதரகத்தின் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கோரிக்கைகள்
ஆனால் இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெறுவதற்கு உரிய கட்டணம் ரூ.8,000லிருந்து ரூ.10,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் குடியுரிமை பெறுவதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. எனவே புதிய பாஸ்போர்ட் விதியையும், இந்திய குடியுரிமை பெறுவதற்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தையும் இந்திய அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அகதிகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications