பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி தேவை-மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி: ஆன்லைன் கல்வி மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வரை, பள்ளிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பெற்றோர்களின் மனநிலை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் லாக்டவுன் நான்காம் கட்ட தளர்வினை அறிவித்து வரும் மத்திய அரசு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களின் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு செல்லலாம் என்று கூறியுள்ள மத்திய அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு கட்டமாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 21ஆம் தேதி முதல், பள்ளிகளின் செயல்பாடுகளை பகுதி அளவுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தாங்கள் விருப்பப்பட்டால், பள்ளிகளுக்கு வரலாம். பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பெறலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுடன் பள்ளிகளும் தங்களது சொந்த பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்... பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு இல்லை - செங்கோட்டையன்
மத்திய அரசு வெளியிட்டுள்ள பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்:
பள்ளிகளில் எச்சில் துப்பக்கூடாது. ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். கைகளை சோப்பால் அடிக்கடி கழுவ வேண்டும். ஒவ்வொரு மாணவரும் 6 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும்.
முக கவசமோ அல்லது முகத்தை முழுமையாக மறைக்கும் தடுப்போ அணிய வேண்டும். தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். தங்களது உடல்நிலையை தாங்களே கண்காணிப்பதுடன், ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால், உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
சாத்தியமான இடங்களில் ஆரோக்ய சேதுசெயலியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வரை, பள்ளிக்கு அழைத்துக்கொள்ளலாம். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.