"தோல்வியில் முடியும் அனைத்து உறவுகளும்.. பலாத்காரம் இல்லை!" குற்றவாளியை விடுவித்தது உச்ச நீதிமன்றம்
பலாத்கார வழக்கில் குற்றவாளியை விடுவித்த சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.
டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னை பலாத்காரம் செய்ததாகப் பெண் தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது. தோல்வியில் முடியும் அனைத்து ஒருமித்த உறவுகளைப் பலாத்காரமாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
டெல்லியைச் சேர்ந்த நைம் அகமது என்பவர் மீது ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பலாத்கார புகாரை அளித்தார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. நைம் அகமதும் ஏற்கனவே திருமணமானவர்..
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், ஒருமித்த உடலுறவு குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை.. நிர்பயா வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!
பலாத்கார வழக்கு
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இருப்பினும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நைம் அகமது கூறியதை நம்பி, அவருடன் உறவில் இருந்துள்ளார். ஏற்கனவே திருமணமான நைம் அகமதை நம்பி அந்த பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளையும் கூட விட்டு வரத் தயாராக இருந்துள்ளார்.. இருப்பினும், அந்த பெண்ணை நைம் அகமது திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண் பாலியல் பலாத்கார புகாரை அளித்திருந்தார்.
உச்ச நீதிமன்றம்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, அந்த நபரை விடுதலை செய்தது. ஒருமித்த உறவைக் குற்றமாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஒருமித்த உறவில் பிரச்சினை ஏற்பட்டுப் பிரியும் போது ஆண்கள் மீது பாலியல் பலாத்காரம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முன்னதாக இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு வாதம்
பெண்ணின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே அவருடன் நெருக்கமாகப் பெண் சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத் தான் உயர் நீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் அகமது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் கே சௌத்ரி, "அந்தப் பெண் தனக்கு அதிகமாகப் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நிதிக் கோரிக்கைகளை அவரால் பூர்த்தி செய்ய முடியாத பின்னரே பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
புகார்
அந்த பெண்ணுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர்.. இருப்பினும், அவர்களை விட்டுவிட்டுக் கடந்த 2019இல் அந்த பெண் அகமதுவுடன் சென்றுவிட்டார். மேலும், 2011இல் அகமதின் குழந்தையையும் அவர் பெற்றெடுத்தார். அதன் பிறகு 2012இல் அகமதின் சொந்த ஊர் சென்ற போதுதான், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும், அந்த பெண் 2014இல் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அதன் பின்னரும், அகமது திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்ததாகவும் இதனால் 2015இல் பலாத்கார புகாரை அளித்துள்ளார்.
தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரிவேதி அளித்த தீர்ப்பில், "அந்த பெண் அகமதுவுடன் உறவு வைத்ததன் மூலம் தனது கணவனுக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் செய்துள்ளார். அவருடன் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அகமது திருமணமானவர் என்று தெரிந்தும் கூட எந்த பெண் அவருக்கு எதிராக எந்தவொரு புகாரையும் அளிக்கவில்லை. இந்த வழக்கில் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது பெண் தவறான வாக்குறுதியை நம்பி பாலியல் உறவுக்குச் சம்மதம் அளித்துள்ளார் என்று சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.
கருத முடியாது
மேலும், தோல்வியில் முடியும் அனைத்து ஒருமித்த உறவுகளைப் பலாத்காரமாகக் கருத முடியாது என்று கூறிய நீதிமன்றம், இந்த பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றம் விடுதலை செய்ததது. அந்த நபரை விடுதலை செய்த போதிலும், குழந்தைக்காக அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சத்தைத் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.