அதிமுக மாஜி ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை- நிபந்தனை ஜாமீனில் தளர்வு!
டெல்லி: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக கோலோச்சியவர் ராஜேந்திர பாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ3 கோடி மோசடி செய்தார் ராஜேந்திர பாலாஜி என்பது புகார். இதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் இந்த வழக்குகளில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ள முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் ராஜேந்திர பாலாஜி. இந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்யும் நிலை உருவானது.
அதேநேரத்தில் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் தமிழகத்தைவிட்டு தப்பி ஓடி வெளிமாநிலங்களில் தஞ்சமடைந்திருந்தார். 18 நாட்கள் இடைவிடாமல் போலீசார் தேடுதல் நடத்தியதில் கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜி வசமாக போலீசிடம் சிக்கினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலையானார் ராஜேந்திர பாலாஜி.
அப்போது விருதுநகரை விட்டு வெளியேறக் கூடாது; அப்படி விருதுநகரை விட்டு வெளியே செல்லுவதற்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனைகள் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டது. இதனடிப்படையில் சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி விருதுநகரிலேயே முடங்கி இருந்தார். மேலும் உச்சநீதிமன்ற நிபந்தனையின் படி, விருதுநகர் போலீசில் விசாரணைக்கு அவர் ஆஜராகி இருந்தார்.
இந்நிலையில் தமக்கான ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கான நிபந்தனைகளை தளர்த்தியது. இதனடிப்படையில் தமிழ்நாட்டை விட்டு ராஜேந்திர பாலாஜி வெளியே செல்லக் கூடாது என தடை விதித்து அவருக்கான நிபந்தனை ஜாமீனை மேலும் 4 வார காலம் நீட்டித்தும் உத்தரவிட்டது. இது ராஜேந்திர பாலாஜிக்கு கொஞ்சம் ஆறுதலான உத்தரவாகவும் பார்க்கப்படுகிறது.
பாஜகவில் 'போலி’ அமைப்பு.. சாட்டையை சுழற்றிய அண்ணாமலை! 'அப்படி ஒன்னு இல்லவே இல்ல’ -3 தாமரைகள் நீக்கம்