ஊழல் தடுப்பு பிரிவை விமர்சித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி! வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: ஊழல் தடுப்பு படை மீது கடும் விமர்சனங்களை வைத்த வழக்கின் விசாரணையை கூடுதலாக 3 நாட்கள் ஒத்திவைக்ககோரி உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
பெங்களூரில் நில பிரச்சனையில் சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக கலெக்டர் அலுவலக அலுவலக ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் உதவி தாசில்தார் மகேஷ் ஆகியோர் 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேரிடம் ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தினர். அப்போது கலெக்டர் மஞ்சுநாத் மீதும் லஞ்சப்புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

ஊழல் தடுப்பு படை மீது விமர்சனம்
இதற்கிடையே தான் தாசில்தார் மகேஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின்கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சந்தேஷ் விசாரித்தார். இந்த விசாரணையின்போது நீதிபதி சந்தேஷ் ஊழல் தடுப்பு படையை குறை கூறினார். அதாவது வழக்கு விசாரணையை ஊழல் தடுப்பு படையினர் சரியாக மேற்கொள்ளவில்லை எனக்கூறிய நீதிபதி, ஊழல் தடுப்பு படையின் கூடுதல் டிஜிபி சீமந்த்குமார் சிங்கையும் கடிந்து கொண்டார்.

நாளைக்கு ஒத்திவைப்பு
இது சர்ச்சையானது. இதற்கிடையே பெங்களூர் கலெக்டர் மஞ்சுநாத் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக மஞ்சுநாத் ஜாமின் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி சந்தேஷ் விசாரித்து 13ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார். அப்போதும் சில கருத்துகளை கூறினார்.

நியமனம் குறித்து விமர்சனம்
அதில், ‛‛கர்நாடக ஊழல் தடுப்பு படைக்கு ஊழல் கறை படியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதில் தலைமை செயலாளர் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு படைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் மீது நம்பகத்தன்மை இருக்க வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு படை குறித்து கருத்து தெரிவித்ததற்காக இடமாற்ற மிரட்டல் வருகிறது. இதற்கு நான் பயப்படமாட்டேன்'' என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே தான் ஊழல் தடுப்பு படையில் கூடுதல் டிஜிபி சீமந்த் குமார் சிங், நீதிபதி சந்தேசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இன்று விசாரணை நடத்தியது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் மேலும் 3 நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications