மத்திய அரசுக்கு திக், திக்.. ரஃபேல் வழக்கு விசாரணை முடிந்தது.. தீர்ப்பை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகிய நீதிபதிகள் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்து வந்தது.
ஒப்பந்தம் தொடர்பாக புகாரை பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்புக்கு உத்தரவிடுவதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை விவரங்களை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து பெற வேண்டும் என்றும், மனுவில், கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரபேல் டீலின் இந்தியர் பார்ட்னர் யார் என்றே தெரியாது.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பல்டி!
முத்தரப்பிடம் விசாரணை
இன்று அதன் இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் இன்று, மனுதாரர் தரப்பு, மத்திய அரசு தரப்பு, விமானப்படை தரப்பு ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதங்களை முன்வைத்தார். பிரசாந்த் பூஷன் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த நிலையில் விமானப்படை சார்பில் ஏர் மார்ஷல் சவுத்தரி, துணை ஏர் மார்ஷல் சலபதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விலை பட்டியல்
ரஃபேல் ஒப்பந்த விலை பட்டியல் குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் முன்வைத்த வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், விலை விவரம் குறித்து இப்போது தெரிவிக்க வேண்டாம். அது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று தெரிவித்து விட்டது. அதேநேரம், எதற்காக முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தத்தை பிரதமர் உருவாக்கினார் என்ற கேள்வியை அரசுக்கு சுப்ரீம் கோர்ட் முன்வைத்தது.
ரிலையன்ஸ்
மேலும், விமான உதிரிபாக தயாரிப்பு தொடர்பாக ஏன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று, மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டது. இதற்கு ரிலையன்ஸ் குழுமத்திற்கு தாங்கள் உரிமம் வழங்கவில்லை என்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் தான் உரிமை வழங்கியது என்றும், அது தொடர்பாக தங்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
36 ரஃபேல் விமானங்களை வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாடு, இறையாண்மை உறுதிமொழியை அளித்துள்ளதா, என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, அவ்வாறு எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளித்தார். அதே நேரம் பிரான்ஸ் நாட்டு பிரதமர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
வழக்கின் பின்னணி
வழக்கின் பின்னணி இதுதான்: 2007 ஆம் ஆண்டு ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் கோரியது என்றும், டெண்டரில் மொத்தம் 126 போர்விமானங்கள் தேவைப்படுகிறது என்றும் அதில் 18 விமானங்கள் தயாரான நிலையிலும், எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் என்றும், நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
புதிய ஒப்பந்தம்
ஆனால் இப்போதைய பிரதமரும், பிரான்ஸ் நாட்டின் அதிபரும் புதிதாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி உள்ளனர். இதன்படி 126 ரஃபேல் போர் விமானங்களில் 36 விமானங்களை பறக்க தயாரான நிலையில் கொள்முதல் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. இதன்பிறகு மற்றொரு ஒப்பந்தத்தின்படி மொத்த ஒப்பந்தத்தில் 50 விழுக்காடு அளவுக்கு ஆப்செட் கான்ட்ராக்ட் என்ற வகையில், இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனில் அம்பானி
ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள அனில் அம்பானி நிறுவனத்திடம்தான் இந்த பணியை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்திற்கான நடைமுறை மற்றும் விலை விவரத்தை சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி அரசு தனது அறிக்கையை சமர்பித்தது.
அறிக்கை தாக்கல்
அந்த அறிக்கையில், பாதுகாப்பு துறையின் கொள்முதல் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட்டே, ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குழு சுமார் ஒரு வருடங்களாக பிரான்ஸ் நாட்டு அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய பாதுகாப்புத் துறைக்கான, அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதலுடன் இரு நாடுகளுக்கு இடையே விமான கொள்முதலுக்கான கையெழுத்து போடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.