சீனாவுடனான பேச்சுவார்த்தை எந்த அளவு பலன் தருமோ தெரியாது.. ராணுவ வீரர்களிடம் ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லி: இந்தியா பலவீனமான நாடு கிடையாது எந்த ஒரு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் நமது நிலத்தில் ஒரு இன்ச் கூட தொட்டுவிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான பேச்சுவார்த்தை பலனளிக்குமா என தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நிலவி வரக்கூடிய நிலையில், இன்று லடாக் புறப்பட்டுச் சென்றார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே ஆகிய உயர் அதிகாரிகளும் அங்கு சென்றனர்.
ஸ்டக்னா மற்றும் லுகுங் ஃபார்வேர்ட் பகுதிகளில் ராஜ்நாத் சிங் ராணுவ முகாம்களை ஆய்வு செய்தார்.
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்க.. சச்சின் பைலட்டிடம் போனில் சொன்ன ப.சிதம்பரம்.. வெளியான தகவல்
லடாக்கில் ராஜ்நாத்சிங்
அங்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வை செய்தார். இதன் பிறகு ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது: எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது, எந்த அளவுக்கு பலன் தரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஒரு இன்ச் நிலம்
உலகின் எந்த ஒரு சக்தி மிக்க நாடாக இருந்தாலும் நமது நாட்டில் ஒரு இன்ச் இடத்தை கூட அவர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைத்தால் அதை விட சிறந்த செய்தி கிடையாது. இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகம் வீண் போக விடமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
20 ராணுவ வீரர்கள்
லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது சீன ராணுவ வீரர்கள் தாக்கியதால், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. சீன தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அந்த நாடு இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அமெரிக்க உளவு அமைப்புகள் தகவல்படி அந்த நாட்டில் சுமார் 35 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.
15 மணி நேரம்
ஒரு பக்கம் ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் 15 மணிநேரம் நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது.
லடாக்கில் மோடி
இதையடுத்துதான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரடியாகச் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஜூலை மாதம் 3ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி லடாக் பகுதிக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். காயம் அடைந்த ராணுவ வீரர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.