தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீரை தர கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. பிப்ரவரி மாதத்துக்குள் 2.5 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குக் காவிரியில் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு இதற்கு செவி சாய்த்தது போல தெரியவில்லை. தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க கூடாது என கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. இந்த சலசலப்புகள் ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில், கடந்த 18ம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையையும் கண்டுகொள்ளாமல், தினமும் ஆயிரம் கன அடிக்கும் குறைவான நீரையே கர்நாடகா திறந்து வந்தது. இதனால் ஜனவரி மாதம் வரை 90.532 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகா நிலுவையில் வைத்திருக்கிறது. இந்த சூழலில்தான் மூன்று மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று கூடியது. இதில் மேகதாது தொடர்பாக விவாதிக்கக் கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்திய நிலையில், அதற்குத் தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், பிப்ரவரி மாதத்துக்குள் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரைக் காவிரியில் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications