வெரி குட் நியூஸ்.. தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா வருவது மிகக்குறைவாம்.. தரவுகளை நீங்களே பாருங்க!
டெல்லி: தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவது மிகமிகக் குறைவு என்று மத்திய அரசு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.
நாட்டில் செயல்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுக்கின்றன. இந்த தடுப்பூசிகள் தொற்றுநோயைக் குறைக்கின்றன என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா மிக வீரியமாக பரவி வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமில்லாமல் கொரோனா போட்டு தாக்கி வருகிறது.
இந்தியா முழுவதும் 13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி: 95 நாட்களில் செலுத்தி சாதனை
தாக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,14,835 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2,104 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது செயல்பாட்டில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 22.91 லட்சத்தை தாண்டியுள்ளது, அதே வேளையில் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,82,553 ஐ எட்டியுள்ளது.
146 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் 146 மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா பாஸிட்டிவ் விகிதம் பதிவாகியுள்ளதாகவும், இது "கவலைக்குரிய அம்சம்' என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். 274 மாவட்டங்கள் 5-15 சதவீத பாஸிட்டிவ் பாதிப்பு தன்மையைப் பதிவு செய்துள்ளதாகவும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள 146 மாவட்டங்களுடன் தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
மத்திய அரசின் குட் நியூஸ்
மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நிலையில் இந்த தடுப்பூசி பெறும் அளவுகள் குறித்து 15 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு மாநிலங்களுக்கு தெரிவிக்கும் என்றும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் தடுப்பூசி விலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவது மிகமிகக் குறைவு என்று மத்திய அரசு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.
மிக குறைந்த எண்ணிக்கை
இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மேலும் கூறுகையில், ' நாட்டில் செயல்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுக்கின்றன. இந்த தடுப்பூசிகள் தொற்றுநோயைக் குறைக்கின்றன. தடுப்பூசிக்குப் பிறகு நமக்கு தொற்று ஏற்பட்டால், அது திருப்புமுனை தொற்று என்று அழைக்கப்படுகிறது. இது மிக மிக குறைந்த எண்ணிக்கையாகும். தடுப்பூசி போட்ட 10,000 பேரில் 2-4 நபர்களுக்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்று தரவுகள் காட்டுகின்றன.
மகிழ்ச்சி கொடுக்கும் தரவுகள்
அதுவும் தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்போதுதான் தொற்று ஆளாகின்றனர். அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற 10.03 கோடியில், 0.02 சதவீதம் (17,145) பேருக்கு மட்டுமே மீண்டும் பாஸிட்டிவ் என வந்துள்ளது. இரண்டு அளவுகளையும் பெற்ற 1.57 கோடி பேரில் 0.03 சதவீதம் (5,014) பேருக்கு மட்டுமே பாஸிடிவ் பாதிப்புகள் வந்துள்ளன. கோவாக்சின் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற 93.56 லட்சத்தில் 0.04 சதவீதம் (4,208) பேருக்கு பாசிட்டிவ் பாதிப்பும், இரண்டு அளவுகளையும் பெற்ற 17.37 லட்சத்தில், 0.04 சதவீதம் (695) பேருக்கு மீண்டும் பாஸிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது என்று ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.