வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாது.. மிஸ் பண்ணிடாதீங்க!
டெல்லி: வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், இது நீட்டிக்கப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-ஃபைலிங் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக பலர் குற்றம்சாட்டியிருந்தனர். எனவே இதற்கான காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
ட்விட்டரிலும் #Extend_Due_Date_Immediately" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஆனாலும் அரசு இந்த கால நீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. ஒருவேளை நீங்கள் இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதத்தையும் நிதி சார்ந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே உடனடியாக வருமான வரியை தாக்கல் செய்துவிடுங்கள் என வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
அடிப்படை கடமை
கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. வழக்கமாக ஜூலை 31 வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். இந்நிலையில் நடப்பாண்டில் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அடிப்படையான கடமையாகும். வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் எல்லாருமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்.
கூடுதல் வட்டி
ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்துவிட்டால், அதற்கு நிறைய சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வருமான வரி சட்டம் 234 ஏ,பி மற்றும் சி பிரிவின் கீழ், வட்டி விகிதம் மற்றும் 234 எஃப் பிரிவின் கீழ் தாமதமாக தாக்கல் செய்ததற்கான கட்டணத்தை தவிர்க்க இயலும். ஆனால், சில காரணங்களால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வரி தாக்கல் செய்ய முடியாதபோது, சில சிக்கல்களும் வரக்கூடும். மாதத்திற்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி, அதற்குரிய வரியுடன் செலுத்த வேண்டும். தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அபராதம்
இதனை தவிர்க்க வருமான வரித்துறையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலையும் அனுப்புகிறது. அதன்படி ஜூலை 26 வரை அதாவது நேற்று வரை 3.4 கோடிக்கும் அதிகமானோர் வரி தாக்கல் செய்துள்ளனர். 26ம் தேதி மட்டும் 30 ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல நீங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அளவில் வருமானம் கொண்டவர் எனில் வருமான வரி செலுத்துவதற்கான கடைசி தேதியை தவறவிட்டுவிட்டீர்களானால், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியை செலுத்திவிடுங்கள். அபராத தொகையை தவிருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
வரி விலக்கு
தனி நபர் அல்லது சம்பளம் பெறும் வரி செலுத்துபவர் பழைய வரி முறையைத் தொடர வருமான வரி சட்டத்தின் பிரிவுகள் 80C, 80D போன்றவற்றின் கீழ் HRA, LTA, மருத்துவ பாலிசி போன்றவற்றுக்கான விவரத்தை தாக்கல் செய்து குறிப்பிட்ட தொகைக்கு விலக்கு கோரலாம்.பழைய வரி விதிப்பின் கீழ், தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு அடிப்படை வரி விலக்கு வரம்பு என்பது அவர்களின் வயது மற்றும் குடியுரிமை நிலையைப் பொறுத்து அமையும். இருப்பினும், புதிய வரி விதிப்பின் கீழ், ஒரு நிதியாண்டில் 60 வயதினருக்கு கீழ் உள்ளவர்களுக்கு அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சம் ஆக இருக்கிறது.
வரி மற்றும் வட்டி டெபாசிட்
60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3 லட்சம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்றாலும் நடபாண்டு 31ம் தேதி வரை கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் இதற்கு அபராதம் விதிக்கப்படும். ஜூலை 31க்குள் நீங்கள் வரி கணக்கை தாக்கல் செய்யாவிடில், செலுத்தப்படாத வரி மற்றும் வட்டியை முன்கூட்டியே டெபாசிட் செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். ஒருவேளை ஜூலை 31க்குள் கணக்கை தாக்கல் செய்துவிட்டால் செலுத்தப்படாத வரியை மட்டும் டெபாசிட் செய்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.