முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை.. குறைந்து தான் வருகிறது.. மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி
டெல்லி: இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாகியுள்ளது என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.
ஆண்டு தோறும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், நாக்பூரில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் உரையாற்றுவார்.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
வக்ஃப் சொத்துகளை கணக்கெடுக்க உ.பி அரசு உத்தரவு.. ரொம்ப தவறு.. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எதிர்ப்பு
இயல்பு நிலையில் பொருளாதாரம்
பெண்களை நாம் சமத்துவத்துடன் நடத்த வேண்டும். வாழ்க்கையில் தேவையான சொந்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பெண்களுக்கு அளிக்க வேண்டும். பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பும் நம்பகத்தன்மையும் அதிகரித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வெகு விரைவாக பொருளாதாரம் இயல்பு நிலையை எட்டிவிட்டது.
மத ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு
இந்தியாவின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் என்றும் உலக பொருளாதார நிபுணர்கள் பலரும் கணித்துள்ளனர். நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அவசியம். மத அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோல் கட்டாய மதமாற்றமும் அதிகரித்து இருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.
மக்கள் தொகை மட்டும் அதிகரித்தால்...
இதை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. மக்கள் தொகைக்கு ஏற்ப வளங்கள் தேவை. வளங்கள் முறையாக உருவாக்காமல் மக்கள் தொகை மட்டும் அதிகரித்துக்கொண்டே சென்றால் அது சுமையாக மாறிவிடும். எனவே இந்த இரண்டையும் மனதில் வைத்த முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம்
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐதராபாத் எம்.பி அசாதூதின் ஒவைசி பேசியுள்ளார். இது குறித்து அசாதூதின் ஓவைசி கூறுகையில், ''முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. எனவே கவலைப்பட வேண்டாம். முஸ்லீம் மக்கள் தொகை சரிந்துதான் வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து மோகன் பகவத் பேச வேண்டாம்'' என்றார்.
மோகன் பகவத் குர்ரானை படிக்க வேண்டும்
மேலும் ஓவைசி பேசும் போது, ''மோகன் பகவத் குர்ரானை படிக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். சிசுவை கொல்வது மிகப்பெரும் பாவம் என்று அல்லா சொல்லியிருக்கிறார். கர்ப்ப கால இடைவெளியை முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். காண்டம்களை அதிகம் முஸ்லீம்களே பயன்படுத்துகின்றனர்'' எனவும் தெரிவித்தார்.