ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்.. தருண் அகர்வால் கமிட்டி விசாரணைக்கு கால நீட்டிப்பு
டெல்லி: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழுவிற்கு கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் தமிழகம் முழுக்க கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதால், மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
[வைகை அணை நீர் மட்டம் கிடு கிடு உயர்வு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]
வழக்கு
இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இந்த குழு விசாரணையை தொடங்கி தூத்துக்குடியில் ஆய்வுகளை மேற்கொண்டதோடு, மக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தது.
தருண் அகர்வால் கமிட்டி
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக உள்ள ஏ.கே.கோயல் முன்னிலையில், தருண் அகர்வால் குழு சார்பில் தாக்கல் செய்த மனுவில், விசாரணை கால கெடுவை கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
கால நீட்டிப்பு
இதையேற்று, கூடுதலாக ஒரு மாதம் கால நீட்டிப்பு செய்து தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் உத்தரவிட்டார். அக்டோபர் 30ம் தேதியுடன் இக்குழுவிற்கு காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், அதை ஒரு மாதம் நீடித்து, நவம்பர் 30ம் தேதிவரை விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது.
விசாரணை வளையம்
பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய தேவை உள்ளதால், இம்மாத இறுதிக்குள், விரைந்து விசாரணையை முடிக்க முடியாது என்று, தருண் அகர்வால் குழு கேட்டுக்கொண்டதால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.