மெதுவான வேகம்.. தடுப்பூசி செலுத்தும் இலக்கில் தடுமாறும் இந்தியா.. என்ன காரணம்?.. தீர்வு என்ன?
டெல்லி: இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு எதிர்பார்ப்புக்கு மாறாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனாவை ஒடுக்குவதற்கு தடுப்பூசி ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும்.
ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டிய மக்கள் இப்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளே மிகவும் பிரதானமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையால் இந்தியாவில் மாதாந்திர தடுப்பூசி இலக்கை எட்ட முடியவில்லை.

இலக்கு தடுமாறுகிறது
இந்த மாத இறுதிக்குள் 13.5 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதுவரை 9.94 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில் தினமும்36.29 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஜூன் சராசரியை விட அதாவது தினசரி 39.89 லட்சம் அளவை விட மிகவும் குறைவாக உள்ளது.

ஆகஸ்டில் 15 கோடி தடுப்பூசி டோஸ்
ஆகஸ்டில் மாதத்தில் 15 கோடி தடுப்பூசி டோஸ் அளவுகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்டு மாதம் தினசரி அளவாக சுமார் 50 லட்சம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறினார். ஆகஸ்டு மாதத்தை பொறுத்தவரை தினமும் 1 கோடி டோஸ் செலுத்த முன்பு இலக்கு நிர்ணயம் செய்யப்ட்டது. அனால் தற்போது அந்த இலக்கையும் எட்ட முடியவில்லை.

காரணம்
ஒரு நாளைக்கு ஒரு கோடி டோஸ் அளவுகளை நிர்வகிப்பதே தங்களது இலக்கு என்றும், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சுமார் 135 கோடி டோஸ் செலுத்த முடிவு செய்யப்ட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளே மக்களுக்கு செலுத்தப்படுகிறது. கூடுதலாக ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தால்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

2 தடுப்பூசிகளே பிரதானம்
பாரத் பயோடெக் தற்போது மாதத்திற்கு 2 கோடி டோஸ் கோவாக்சின் சப்ளை செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய சீரம் நிறுவனம் 10 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட்டை வழங்குகிறது. ஆகஸ்டில், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 கோடியைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடர்னா தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ஆகிய நிறுவனங்களுடன் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.

சுகாதாரத்துறை அதிகாரிகள்
எனவே புதிய தடுப்பூசிகள் வராவிட்டால், மக்களுக்கு தடுப்பூசி விரைவாக கிடைப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்ய முடியாது என்று சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மாடர்னாவின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி விரைவில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியுமா? என்று கேள்வி கேட்டதற்கு, 'இது தொடர்பான பேச்சுவார்தைகள் நடந்து வருகின்றன. ஒரு நல்ல முடிவு ஏற்படும்போது நாங்களே உங்களிடம் தெரிப்போம்' என்று சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications