இந்த 3 மாதங்கள் மிகமுக்கியம்.. பரவும் தொற்று.. அடுத்தடுத்து பண்டிகைகள், விடுமுறைகள்.. புது வார்னிங்
அடுத்து 3 மாதங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
டெல்லி: பண்டிகை காலம் துவங்க உள்ளதால், வரப்போகும் 3 மாதங்களில் மட்டும் மக்கள் கூடுதல் கவனமாக இருந்தால் போதும்.. எந்த சூழலிலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துவிட கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை.. நேற்றுகூட ஒரேநாளில் நாடு முழுவதும் 30 ஆயிரத்து 570 கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது.. இதைதவிர, 3 லட்சத்து 42 ஆயிரத்து 923 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்..
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 474 ஆக அதிகரித்தபோதிலும்கூட, நாடு முழுவதும் இதுவரை 76 கோடியே 57 லட்சத்து 17 ஆயிரத்து 137 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும்கூட, தொற்று பாதிப்புகளும் உயர்ந்து கொண்டுதான் போகிறது.

2வது அலை பரவல்
ஆனால் அதேசமயம், 2வது அலை பாதிப்பின் வீரியமானது சற்று குறைந்துள்ளது.. கடந்த மே மாதம் 4 லட்சத்தையும் தாண்டி தொற்று பரவி கொண்டிருந்தது.. பிறகு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களில் மேலும் கேஸ்கள் அதிகமாக பதிவாகி கொண்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் 431 பேர் உயிரிழந்துள்ளனர்... இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்து 43 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

விடுமுறைகள்
இந்நிலையில் பண்டிகை காலமும் தொடங்கி உள்ளது.. இதனால் விடுமுறைகளும் அடுத்தடுத்து வர வாய்ப்புள்ளது.. அதனால் எப்படியும் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது.. இப்போதைக்கு நாட்டிலேயே கேரளாவில்தான் அதிக பாதிப்பு தென்பட்டு வருகிறது.. கடந்த வாரத்தில் மொத்த பாதிப்புகளில் 67.79 சதவீதம் கேரளாவில் மட்டுமே பதிவாகியுள்ளது... இங்கு மட்டும்தான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொற்று நோயாளிகள் உள்ளனர்..

பேட்டி
இப்படிப்பட்ட சூழலில்தான், ஐசிஎம்ஆர் என்று சொல்லப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவையும் அதிகரித்து வருகிறது.. தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும், வெளியூர் பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.. பண்டிகை காலங்களில் பொறுப்புடனும், தொற்று பரவாமல் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்..

நெரிசல்
இனிமேல் அடுத்தடுத்து நிறைய பண்டிகைகள் வரஉள்ளது.. அதனால் முடிந்தவரை கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.. மக்கள் நெரிசல் எங்குள்ளதோ, அங்கு வைரஸ் எளிதாக பரவக்கூடும்... திடீரென நிறைய பேர் ஒன்று கூடுதல், கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் ஈடுபட கூடாது. இப்போதைக்கு ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாட்டில் வைரஸ் பரவல் குறைந்து கொண்டுதான் வருகிறது.. கேரளாவிலும்கூட இந்த நிலைமை மாற தொடங்கிவிட்டது..

நோய்த்தொற்று
வரப்போகும் 3 மாதங்களில் மட்டும் மக்கள் கவனமாக இருந்தால் போதும்.. மற்றபடி எந்த சூழலிலும் நோய்த்தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துவிட கூடாது. ஏனெனில் பண்டிகைகள் மட்டுமல்லாமல், ப்ளூ காய்ச்சல் பரவல் போன்றவையும் நமக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.. இப்போது அவை கட்டுக்குள் உள்ளதென்றாலும், அதே கட்டுக்குள் அப்படியே கொண்ட செல்ல வேண்டிய நிலைமையிலும் நாம் உள்ளோம்.. தடுப்பூசிகள் போடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது...
Recommended Video

பூஸ்டர்
ஆனால், பூஸ்டர் தடுப்பூசி குறித்து அறிவியல் ரீதியாகவும், பொது சுகாதாரத்துறையிலும் இதுவரை எந்தவித ஆலோசனையும் செய்யப்படவில்லை.. 2 தடுப்பூசிகளை போடுவதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது" என்றார். தொடர்ந்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசும்போது, கேரளாவில் தொற்று குறைகிறது, ஆனால் மிசோரத்தில் அதிகமாகி கொண்டிருக்கிறது.. அடுத்த 3 மாதத்துக்கு நாம் எல்லாருமே கவனமாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications