உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்!
இந்திய விமானி அபிநந்தன் என்ற ஒற்றை நபரால், 40 வருடமாக பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் மத்தியில் இருந்த பிம்பம் 48 மணி நேரத்தில் மாற்றப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: இந்திய விமானி அபிநந்தன் என்ற ஒற்றை நபரால், 40 வருடமாக பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் மத்தியில் இருந்த பிம்பம் 48 மணி நேரத்தில் மாற்றப்பட்டு இருக்கிறது.
எங்களுக்கு போரில் செலவு செய்ய விருப்பம் கிடையாது.. எங்கள் நாட்டின் கட்டமைப்பிற்கே நாங்கள் செலவு செய்ய ஆசைப்படுகிறோம்... இதுதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று நாடாளுமன்ற உரையில் பேசியது. இதை அவர் எதிர்கட்சிகளுக்காக பேசவில்லை.. இந்தியாவிற்காக பேசவில்லை.. மோடிக்காக பேசவில்லை.. இதை அவர் உலகிற்காக பேசினார்.
விமானி அபிநந்தன் விவகாரம் மூலம் அவர் உலக நாடுகள் அனைத்திற்கும் அனுப்பிய மெசேஜ்தான் அந்த வாசகம். ஆம் பாகிஸ்தானின் முகத்தை ஒரே ஒரு நபர் மாற்றி இருக்கிறார்.. அந்த நபர் இம்ரான் கான் கிடையாது, அந்த நபர் அபிநந்தன் வர்த்தமான்!
[Read more: ப்பா.. என்ன மரியாதை.. என்ன கைதட்டல்.. ஹீரோ அபிநந்தனின் பெற்றோருக்கு மாஸ் வரவேற்பு- வீடியோ!]
என்ன நடந்தது
இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தானின் எல்லைக்குள், பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார், அதுவும் இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில் அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் மாட்டிக்கொண்டார். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இரண்டு நாடுகளிலும் பெரிய பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவமும் பெரிய போருக்கு வழி வகுக்க போகிறது என்று விவாதம் நடந்தது.
வீடியோ வெளியானது
இந்த நிலையில்தான் அந்த வீடியோக்களும், போட்டோக்களும் வெளியானது. பாகிஸ்தான் மக்கள் சிலர் அபிநந்தனை அடிக்கும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. முகம் முழுக்க ரத்தம் வடிய அபிநந்தன் நடந்து வரும் புகைப்படங்கள் வெளியானது. உலகம் முழுக்க இந்த புகைப்படம் வைரலானது. பாகிஸ்தான் இந்தியா இடையே போர் பதற்றத்தை உருவாக்கியது.
ஆனால் என்ன
ஆனால் அதன்பின் அந்த பெரிய மாற்றம் நடந்தது. அபிநந்தன் காபி குடிக்கும் வீடியோவை பாகிஸ்தான் வேண்டும் என்றே வெளியிட்டது. ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்த வீடியோவை வெளியிட காரணம் இல்லாமல் இல்லை. நாங்கள் உங்கள் நாட்டு குடிமகனை நன்றாகவே வைத்து இருக்கிறோம், அவர் பாதுகாப்பாக இருக்கிறார், வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மறைமுக தூது அந்த வீடியோ மூலம் அனுப்பப்பட்டது.
உலகம் உருகியது
பாகிஸ்தானியர்கள் வெளியிட்ட இந்த வீடியோதான் பாகிஸ்தான் மீதான முகத்தை முதல்முறை மாற்ற தொடங்கியது. இந்தியர்கள் மத்தியிலும் பாகிஸ்தானை நோக்கி ஒரு கரிசனம் கொள்ள செய்தது. அட பரவாயில்லயே என்று பலர் டிவிட் செய்து வந்தனர். அதன்பின்தான் இம்ரான் கான் அந்த பேட்டியை கொடுத்தார்.
என்ன சொன்னார்
அதில் இம்ரான் கான், நாங்கள் போர் செய்ய ஆசைப்படவில்லை. வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம். போரை நாம் எளிதாக தொடங்கிவிடலாம். ஆனால் அதை நம்மால் முடிக்க முடியாது. போரை தொடங்குவது மட்டுமே நம் கையில் இருக்கிறது.. அதை முடிப்பது நம்முடைய கையில் கிடையாது., என்று வெளிப்படையாக இந்தியாவை பேச அழைத்தார்.
ஆனால் இந்தியா
ஆனால் இந்திய தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ''பாகிஸ்தான் அபிநந்தனை பயன்படுத்தி இந்தியாவை மிரட்ட பார்த்தால் நடப்பதே வேறு'' என்று, இம்ரான் கான் பேசியதற்கு எதிரான திசையில்தான் இந்திய தரப்பு பேசியது. நிலைமை அப்படியே நீடிக்க நீடிக்க, முப்படை தளபதிகளும் இந்தியாவில் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
இம்ரான் முந்திக்கொண்டார்
ஆனால் இம்ரான் கான் அவர்களை முந்திக் கொண்டு நாடாளுமன்றத்தை கூட்டினார். அதில்தான் இம்ரான் அந்த அறிவிப்பை வெளியிட்டார். நல்லெண்ண அடிப்படையில் அமைதியை கருத்தில் கொண்டு அபிநந்தனை விடுவிக்கிறோம் என்று கூறிவிட்டு அமர்ந்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றம் கைத்தட்டலில் அதிர்ந்தது. அதில் அவர் சில முக்கிய விஷயங்கள் கூறினார்.
சொன்னது
அவர் அதில் கூறிய முக்கிய வரிகள் சில,
1. எங்களுக்கு போர் நடத்த விருப்பம் இல்லை, பாகிஸ்தானின் கட்டமைப்பை மேம்படுத்தவே விருப்பம்.
2. ஒரு போர் எப்படி இருக்கும் என்று 50 வருடமாக நாங்கள் அனுபவித்து இருக்கிறோம்.
3.புல்வாமா தாக்குதல் போன்ற மோசமான தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா?
4. நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம்.
5. எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
6. மோடியிடம் பேச பல முறை முயற்சி செய்தேன்.
இதுதான் அவர் அவையில் பேசிய முக்கியமான விஷயங்கள்.
பயன்படுத்தினார்
தன்னுடைய நாட்டின் மீது இருந்த பிம்பத்தை மாற்ற இம்ரானுக்கு கிடைத்த ஒரே வாய்ப்புதான் அபிநந்தன். நாங்கள் போரை விரும்பவில்லை, உங்கள் பிரஜையை பத்திரமாக ஒப்படைகிறோம் என்று இம்ரான் கூறியதன் பின்புலம் இதுதான். இது உலக நாடுகளுக்கு அவர் அனுப்பிய கடிதம், மெசேஜ் என்று கூறலாம். அது பெரிய அளவில் பாகிஸ்தானுக்கு பலன் அளித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நினைத்தது என்ன
எனக்கு அங்கிருந்து நல்ல செய்தி வருகிறது.. இதுதான் இம்ரான் முடிவை தெரிந்து கொண்ட பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது. முதல்முறை டிரம்ப் இப்படி பாகிஸ்தான் அதிபர் ஒருவருக்கு ஆதரவாக மறைமுகமாக பேசி இருக்கிறார். உலக நாட்டின் பல தலைவர்கள் பாகிஸ்தானை நேற்று இப்படித்தான் புகழ்ந்தார்கள். பாகிஸ்தானின் இமேஜ் நேற்று இப்படித்தான் உலகம் முழுக்க மாறியது.
ஒரே தமிழர்
பாகிஸ்தானின் இத்தனை பெரிய மாற்றத்துக்கு பின் இருப்பது தமிழர் அபிநந்தன் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. நான் ''டவுன் சவுத்'' என்று அபிநந்தன் பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பார். அந்த ''டவுன் சவுத்'' நபர்தான் பாகிஸ்தானின் இத்தனை வருட முகத்தை தெரிந்தோ, தெரியாமலோ மொத்தமாக மாற்றி இருக்கிறார்!