சட்டென திரும்பிய கேமரா.. விலை உயர்ந்த பேக்கை மறைத்த பெண் எம்பி.. நாடாளுமன்ற விலைவாசி விவாத ருசிகரம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்தது. இந்த வேளையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா தனது விலை உயர்ந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹேண்ட்பேக்கை மறைத்தது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அது தற்போது விவாதமாகி உள்ளது.
திரிணாமுல் காங்கிஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக உள்ளார்.
இவர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இவர் பாஜகவினருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

விலைவாசி உயர்வு பற்றிய விவாதம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதிலும் பாஜகவை அவர் கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து வந்தார்.

ஹேண்ட்பேக்கை மறைத்த எம்பி
அப்போது மஹுவா மொய்த்ராவின் அருகே அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் விவாதத்தில் பங்கேற்றார். அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து பேசினார். இதையடுத்து அவரை ‛போக்கஸ்' செய்யும் வகையில் கேமரா சென்றது. இதை பார்த்த மஹுவா மொய்த்ரா தனது இருக்கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை எடுத்து இருக்கையின் அடியில் கொண்டு சென்று மறைத்தார்.

விவாதமான வீடியோ
தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் மஹுவா மொய்த்ரா மற்றும் அவரது ஹேண்ட்பேக் பற்றிய விவாதம் எழுந்தது. இதையடுத்து சில நெட்டிசன்கள் அவரது ஹேண்ட்பேக் விலையை ஆராய்ந்தனர். அதில் ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டன் ஹேண்ட்பேக்கை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் எம்பி பயன்படுத்திய ஹேண்ட்பேக்கின் நிறத்தின் அடிப்படையில் அது ரூ.1.60 லட்சம் மதிப்பு கொண்டது, ரூ.2 லட்சம் மதிப்பு கொண்டது என சிலர் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம் என்ன?
மேலும் விலைவாசி உயர்வு விவாதத்தின்போது தனது விலையுயர்ந்த ஹேண்ட்பேக் கேமரா கண்களில் சிக்கினால் அது சர்ச்சையாகலாம் என நினைத்து மஹுவா மொய்த்ரா அதனை மறைத்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுபற்றி மஹுவா மொய்த்ரா எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications