பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரியா ரமணிக்கு ஜாமீன்.. உண்மைதான் எனது பாதுகாப்பு என்று கருத்து
டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான அவதூறு வழக்கில் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உண்மைதான் என்னுடைய பாதுகாப்புக் கவசமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கும் மேலாக துறையில் பணியாற்றிய முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களை கூறினர். மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் அடங்குவர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த எம் .ஜே. அக்பர், குற்றச் சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். அதோடு, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.
தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பிரியா ரமணியை விசாரணைக்காக ஆஜராகுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆஜரான அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அத்துடன் பிணைத் தொகையாக ரூ.10,000 செலுத்தவும் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 8ம் தேதி நடைபெறும் என்று நீதி மன்றம் கூறியிருக்கிறது .
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரியா ரமணி, ஏப்ரல் 10ம் தேதி என் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைப்பார்கள். அதற்குப் பிறகுதான் நடந்த சம்பவத்தை என்னால் கூற முடியும். இந்த வழக்கில் உண்மைதான் என்னுடைய பாதுகாப்புக் கவசமாக இருக்கும் என்று கூறினார்.