இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தனிநாடாக காட்டிய ட்விட்டர்.. எதிர்ப்பால் சர்ச்சை மேப் நீக்கம்
டெல்லி: மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ட்விட்டர் தளத்தில் இந்தியா மேப்-இல் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மத்திய அரசு கடும் கோபம் அடைந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய மேப்பை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.
நாட்டிலுள்ள சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டததை அனைத்து சமூக ஊடகங்களும் ஏற்றுக் கொண்ட போதிலும், ட்விட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் காணப்படுகிறது.

தனி நாடு
இந்தச் சூழ்நிலையில். ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டு இருந்தது.

மத்திய அரசு
இது ட்விட்ரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டனர் ஏற்கனவே, புதிய ஐடி விதிகளுக்கு உட்படாமல் இருப்பது, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டர் பக்கம் முடக்கம் என பல்வேறு விஷயங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் கோபம் கொண்டது.

சண்டை
இதனிடையே புதிய ஐடி விதிகளின்படி ட்விட்டரின் இடைக்கால அதிகாரியாக இருந்த தர்மேந்திரா சாத்தூர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் என்பவரை ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. இருப்பினும், அரசின் ஐடி விதிகளின்படி இந்தியர் ஒருவரைத் தான் இந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கரை நியமித்துள்ளதால் மத்திய அரசுக்கும் டவிட்டருக்கும் இடையே இருக்கும் மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே லடாக்
இதனால் அந்நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசின் கடும் நடவடிக்கை பாயும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில இந்தியாவில் இருந்து பிரித்து காஷ்மீரை தனியாகக் காட்டிய மேப்பை ட்விடடர் நிறுவனம் நீக்கி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் மேப்-ஐ இப்படி தவறாகக் காட்டுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லடாக் யூனியன் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியது. இதனைக் கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, இது தொடர்பாக ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னரே ட்விட்டர் தனது தவறை சரி செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications