மத்திய அரசின் எச்சரிக்கை நோட்டீஸ்... அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கோரும் ட்விட்டர்
டெல்லி: அரசின் உத்தரவுகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கட்டுப்படவில்லை என்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தலைநகரில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாய சட்டங்களுக்கு எதிராகக் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இதில் சில காவலர்களும் காயமடைந்தனர்.
அப்போது முதலே போராட்ட களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வன்முறை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய 257 ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசு நோட்டீஸ்
இருப்பினும், ட்விட்டர் நிறுவனம் அந்த ட்விட்டர் கணக்குகளைத் தற்காலிகமாக மட்டுமே முடக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன், முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பட அந்நிறுவனம் அனுமதி அளித்தது. ட்விட்டரின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, மீண்டும் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் அரசின் உத்தரவை தீர்மானிக்கும் பொறுப்பில் ட்விட்டர் இல்லை என்றும் அரசின் உத்தரவை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
கருத்து சுதந்திரம்
மத்திய அரசு அனுப்பியுள்ள இந்த நோட்டீஸ் குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம். தொடர்ந்து அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம். இது தொடர்பாக மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நேரம் கோரியுள்ளோம். அதே நேரம் அனைவரது கருத்துச் சுதந்திரத்தையும் நாங்கள் முழுவதுமாக மதிக்கிறோம்" என்று அவர் கூறினார். அரசின் உத்தரவை ஏற்றுக் கணக்குகளை நிரந்தரமாக முடக்க ட்விட்டர் நிறுவனம் தாயாராக இல்லை.
அடுத்தகட்ட திட்டம்
மேலும், அரசின் உத்தரவுகள் தொடர்பாகத் தீவிரமாக விசாரணை நடத்தி, அதற்கு ஏற்றவாறே நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்திற்கு நடவடிக்கை எடுக்கத் தேவையான காலத்தை வழங்கியுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதேபோல விவசாயிகள் இனப்படுகொலை என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்திருந்த மேலும் 1178 கணக்குகளையும் முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு நேற்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது,
ட்விட்டர் பாலிசி
பொதுவாக, அரசிடம் இருந்து இதுபோன்ற உத்தரவுகளைப் பெறும்போது, சில கணக்குகளை மட்டுமே ட்விட்டர் நிறுவனம் முடக்கம். மற்ற கணக்குகளுக்கு எச்சரிக்கை செய்தி மட்டுமே அனுப்பப்படும். அவர்கள் தொடர்ந்து செயல்படவும் அனுமதி அளிக்கப்படும். கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 13,200 ட்விட்டர் கணக்குகளை முடக்கக் கோரி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவற்றில் வெறும் 17 ட்விட்டர் கணக்குகளை மட்டுமே அந்நிறுவனம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.