ChatGPTஐ விடுங்க.. நிலவுக்கு பறக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி! அப்போ அடுத்து அதுதானா! பரபர
ChatGPT போன்ற ஒரு ஏஐ கருவி கொஞ்ச வாரத்தில் நிலவை அடையவுள்ளது.
டெல்லி: நெட்டிசன்கள் அனைவரும் இப்போது ChatGPT ஏஐ தளம் குறித்தே பேசி வருகின்றனர். இருப்பினும், அதற்கே போட்டி தரும் வகையில் ஒரு ஏஐ கருவி நிலவுக்குச் செல்ல உள்ளது.
கொஞ்சக் காலமாகவே ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ChatGPT பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. செயற்கை நுண்ணறிவியல் எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGPT அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஏற்கனவே பல ஏஐ கருவிகள் வந்திருந்தாலும் அதில் எதுவும் இந்தளவுக்கு வலிமையான ஒன்றாக இருந்தது இல்லை. நாம் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் அப்படியே ஒரு அறிவார்ந்த மனிதனைப் போல இது பதில் தருகிறது.

சாட் ஜிபிடி
செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான ChatGPTஇன் திறன்கள் நெட்டிசன்களை மிரளச் செய்துள்ளது. அது நாம் கேட்கும் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதில் அளிப்பது மட்டுமில்லை, இது எம்பிஏ மற்றும் சட்ட தேர்வுகளைக் கூட ஈஸியாக பாஸ் செய்கிறதாம். இதனால் ChatGPTஐ பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதேநேரம் இந்த ஏஐ கருவியால் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளதாக பல்வேறு வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலவுக்குப் பறக்கும் ஏஐ
ஒட்டுமொத்த உலகமே இப்போது ChatGPT குறித்தே பேசி வருகிறது. ஆனால், ஐக்கிய அமீரகம் அதைத் தாண்டி சென்றுவிட்டது. அவர்கள் அனுப்பி இருக்கும் சக்திவாய்ந்த ஏஐ கருவி இப்போது நிலவுக்கே செல்ல உள்ளது. ஐக்கிய அமீரகம் உருவாக்கிய ரோவரில் மூன்நெட் என்று அழைக்கப்படும் இந்த ஏஐ கருவி மெல்ல நிலவை நோக்கி நெருங்கி வருகிறது. ரஷித் ரோவர் என்ற இந்த சாட்டிலைட் கடந்த டிசம்பர் 11இல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

யார் உருவாக்கியது
இன்னும் கொஞ்ச வாரத்தில் அந்த சாட்டிலைட் நிலவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஜப்பானின் HAKUTO-R மிஷன் 1 என்ற லேண்டரைப் பயன்படுத்தி நிலவில் தரையிறங்க உள்ளது.. இந்த ரோவரில் இருக்கும் ஏஐ கருவியை 3.04 மில்லியன் டாலர் செலவில் கனடா விண்வெளி ஏஜென்சி உருவாக்கியுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் ஆழமாக கற்கும் ஏஐ கருவியை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்குத் தரையிறங்கும்
பூமிக்குத் தெரியும் நிலவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அட்லஸ் பள்ளத்தில் இந்த ஏஐ கருவி பயன்படுத்தப்படும். இந்த ராஷித் ரோவர் சந்திர மேற்பரப்பு குறித்தும் அதன் இயக்கம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது. மேலும், நிலவில் ஒவ்வொரு பகுதியிலும் அதன் துகள்கள் எந்தளவுக்கு மாறுபட்டு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 10-கிலோ எடையுள்ள இந்த ரோவர் இரண்டு கேமராக்கள், ஒரு தெர்மல் இமேஜரி கேமரா உள்ளிட்ட கருவிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதற்கு பயன்படும்
சந்திரனில் உள்ள புவியியல் சார்ந்த விஷயங்களை ரோவர் படம் பிடிக்கும். அதேநேரம் ஏஐ கருவியான மூன்நெட் புவியியல் சார்ந்த அம்சங்களைக் கண்டறிந்து, அபாயங்களைத் தவிர்க்க உதவும். மேலும், திட்டமிட்டபடி அனைத்து ஆய்வுகளையும் செய்ய உறுதுணையாக இருக்கும். வரும் காலத்தில் ரோபோக்களின் வளர்ச்சிக்கு இந்த AI கருவிகள் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து அதுதானா
இந்த ரோவர் நிலவில் சுமார் 29 நாட்கள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால்.. விண்வெளியில் ஏஐ துறையின் மிகப் பெரிய சாதனையாக இது கருதப்படும். விண்வெளி துறையில் இது நிச்சயம் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. விண்வெளியில் அனைத்து துறைகளிலும் மகத்தான சாதனையை இது படைக்கும்" என்றார். மேலும், இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால், வரும் காலத்தில் பல விண்வெளி சார்ந்த ஆய்வுகள் ஏஐ உதவியுடனேயே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எமிரேட்ஸ் விண்வெளி ஏஜென்சி
எமிரேட்ஸ் விண்வெளி ஏஜென்சி மேற்கொள்ளும் இரண்டாவது மிகப் பெரிய பணி இதுவாகும். இதற்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய இவர்கள் ஹோப் என்ற சாட்டிலைட்டை அனுப்பினர். இது வெற்றிகரமாக இருந்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. செவ்வாய்க் கிரகத்தைப் பல கோணங்களில் இருந்து அது ஃபோட்டோக்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதில் மார்ஸ் கிரகத்தின் தனித்துவமான அரோராக்கள்தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications