"போர் குற்றவாளிக்கு இடமில்லை!" கொந்தளிக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு சிக்கல்! இந்தியா நிலைப்பாடு என்ன
டெல்லி: உக்ரைன் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இப்போது தற்காலிகமாக ரஷ்யா தனது தாக்குதலைக் குறைத்துள்ள போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
இந்த போர் காரணமாக இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் மக்கள் அகதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.

உலக நாடுகள்
உக்ரைன் போரில் உலக நாடுகள் நேரடியாகத் தலையிடவில்லை என்றாலும் கூட இந்தப் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது உலக நாடுகள் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இந்த தடைகள் எல்லாம் ரஷ்யப் பொருளாதாரத்தின் மீது மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், போர் முழுவதுமாக முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

போர் குற்றம்
தற்போது உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகள் படிப்படியாக வெளியேறும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி உக்ரைனின் புச்சா நகரில் ஆயுதங்கள் இல்லாமல் சாதாரண உடையில் இருந்த பல நூறு உக்ரைன் மக்கள், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா சஸ்பெண்ட்
இந்தச் சூழலில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. மொத்தம் 193 நாடுகளைக் கொண்ட ஐநா சபையில் 93 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 24 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன. 58 பேர் வாக்களிக்கவில்லை. இதன் மூலம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேறியது. கடந்த 2011இல் மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர், சஸ்பெண்ட் ஆகும் 2ஆவது நாடாக ரஷ்யா உள்ளது.

உக்ரைன் வரவேற்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்யும் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஐநா அமைப்புகளில் போர்க்குற்றவாளிகளுக்கு இடமில்லை என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வரலாற்றில் சரியான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு
வழக்கம் போல இந்தத் தீர்மானம் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. இதற்கு முன்பு ஐநா சபைகளில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பல்வேறு தீர்மானங்களிலும் இந்தியா வாக்களிக்காமலேயே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட கால நட்பு உள்ள நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications