இதுவும் அம்போவா- ரயில்வே நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: நாடு முழுவதும் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான நிலத்தை தற்போதைய 5 ஆண்டுகளுக்குப் பதில் இனி நீண்டகால குத்தகைக்கு விடும் கொள்கை முடிவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் அரசு துறை நிறுவனங்கள் அடுத்தடுத்து தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. தனியார் ரயில்வேயும் கூட இயக்கப்பட்டு விட்டது. இந்த வரிசையில் தற்போது ரயில்வேக்கு சொந்தமான ஏராளமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில்வே நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் அதன் மூலம் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும்.
ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலைதொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும். இக்கொள்கையின் மூலம் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 300 சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும். நிலத்தின் சந்தை மதிப்பில், ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டியில், 35 ஆண்டுகள் வரை சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது ரயில்வே நிலத்தின் சந்தை மதிப்பில் 1.5% குத்தகை தொகையாக மத்திய அரசு பெறும். இந்த ரயில்வே நிலம் 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு கொடுக்கப்படும். தற்போது ரயில்வே நிலம் 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான் குத்தகைக்கு வழங்கப்பட்டது. இப்படி 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு கொடுப்பதன் மூலம் 300 சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமையும் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பு.