கமல்ஹாசனுக்கு ராகுல் கொடுத்த பேட்டியில் அத்தனையும் பொய்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளாசல்
சீனா ஆக்கிரமிப்பு தொடர்பான ராகுலின் தகவல்கள் பொய்யானவை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அளித்த பேட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்ததை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்டமாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த 1 மாதத்துக்கு முன்னதாக ராகுல் காந்தியின் பயணம் டெல்லியை சென்றடைந்தது. அப்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இந்த யாத்திரையில் இணைந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி- கமல்ஹாசன் இடையேயான உரையாடல் ஒரு பேட்டி வடிவில் வீடியோவாக வெளியிடப்பட்டது. அந்த பேட்டியில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
கமல்ஹாசனுக்கு கொடுத்த பேட்டியில் ராகுல் காந்தி சீனா குறித்து கூறியிருந்ததாவது: தற்போது நாட்டின் பாதுகாப்பு சிறப்பானதாக இல்லை. நமது எதிரி நாடு பல்வேறு வடிவங்களில் நமது தேசம் மீது தாக்குதல் நடத்தக் கூடும். 21-ம் நூற்றாண்டில் நிற்கும் நாம் போர்கள் குறித்த உலகளாவிய பார்வையை கொண்டிருக்க வேண்டும். ஏற்கனவே நமது நாட்டின் 2,000 கி.மீ. நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துவிட்டது. இதனை ராணுவம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் பிரதமரோ மறுக்கிறார். இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேட்டிக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: சீனா விவகாரத்தில் சிலர் திட்டமிட்டே பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். அண்மையில் சிலர் உண்மைக்கு மாறான தகவல்களை அரசியலுக்காக தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு ராகுல் காந்தி பேசுகையில், நமது நாட்டின் 100 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது. இதனை எப்படி பிரதமர் மோடி மீட்பார் என கேள்வி கேட்டிருந்தார்.
ஆனால் அண்மையில் சீனா 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது. பிரதமர் மோடி எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்கிறார் ராகுல் காந்தி (கமல்ஹாசனுக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தார் ராகுல் காந்தி. இதனை வெளிப்படையாக குறிப்பிடாமல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டி பேசினார்). 1962-ம் ஆண்டு சீன யுத்தத்தை குறிப்பிட்டு பேசுகின்றனர். ஆனால் உண்மையை மக்களிடம் சொல்வது இல்லை. திட்டமிட்ட உள்நோக்கத்துடனேயே இப்படியான பொய்யை மக்களிடம் சிலர் பரப்பி விடுகின்றனர்.
சீனா குறித்து அவர்கள் ஏன் தவறான தகவலை பரப்புகின்றனர்? அவர்களுக்கு ஏன் நமது நாடு மீது நம்பிக்கை இல்லை? ஏன் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்? இதற்கு எல்லாம் நாம் எப்படி பதில் சொல்வது? ஏனெனில் அவர்களது அரசியல் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சீனா தொடர்பாக ஏதேனும் தகவல் தேவை என்றால் நாம் சீனாவிடம் கேட்க மாட்டோம். நமது ராணுவ தளபதியிடம்தான் கேட்போம். (2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் இந்தியா- சீனா இடையே மோதல் நிகழ்ந்தது. அப்போது சீன தூதரை ராகுல் காந்தி 2 முறை சந்தித்ததாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது அதனை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்). இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications