’லட்சுமி’ படத்தை அச்சிட்டால் ரூபாய் மதிப்பு உயரும்.. பொருளாதாரத்தை உயர்த்த கெஜ்ரிவாலின் புதிய ஐடியா!
டெல்லி: இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரின் படங்களை அச்சிட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியுடனும் முடிவுக்கு வருகிறது. இதனால் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குஜராத் பயணித்து மக்களை சந்தித்து வருகிறார்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி: ஆங்கிலேயர்களை விட மத்திய பாஜக அரசு மோசம்.. விளாசிய அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத் தேர்தல்
கடந்த சில மாதங்களாகவே குஜராத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மின்சாரம், கல்வி, மகளிர் உரிமைத் தொகை, இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை, பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இவரது வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதால், குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி சவால் அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரின் படங்களைச் சேர்க்க வேண்டும். மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுள்களின் புகைப்படங்களைச் சேர்ப்பது நாட்டுக்கு செழிப்பைக் கொண்டுவரும்.
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி
அதேபோல் இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்ற தேவையில்லை. அதற்கு பதிலாக இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரின் படங்களை இனிமேல் அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் சேர்க்க வேண்டும். நாட்டில் ஒவ்வொரு நாளும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த இரண்டு கடவுள்களும் வளர்ச்சி மற்றும் பொருளாதார செழிப்புடன் தொடர்புடையவை. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த கடவுளின் ஆசிர்வாதம் மிகவும் அவசியமானது.
இந்தோனேஷியா நோட்டில் விநாயகர்
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான இந்தோனேஷியாவில் 2 முதல் 3 சதவிகிதம் வரை மட்டுமே இந்துக்கள் வசித்து வ்ருகிறார்கள். ஆனால் இந்தோனேஷியா நாட்டின் நாணயத்தில் விநாயகரின் புகைப்படம் உள்ளது. இந்தோனேசியாவால் செய்ய முடியும் போது ஏன் இந்தியாவால் செய்ய முடியாது. விரைவில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவேன் என்று தெரிவித்தார்.