ஆளுநர் ரவி கேஸில் பரபரப்பு- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு-மத்திய அரசு திடீர் முடிவு
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக விரைவில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்ற 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது.
ஆளுநர்கள், மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டவர்கள்; ஆளுநர்கள், மாநில அரசின் மசோதாக்கள் மீது அதிகபட்சம் 4 மாதத்துக்குள் முடிவெடுத்தாக வேண்டும்; ஆளுநர்கள் அரசியல்வாதிகளைப் போல செயல்படக் கூடாது என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
அத்துடன், தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில் 10 மசோதாக்களும் நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசும் அரசிதழில் வெளியிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. ஆனால் மத்திய பாஜக அரசோ, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநில ஆளுநர்களுக்கு கடிவாளம் போட்டிருக்கக் கூடிய இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறதாம் மத்திய அரசு. இந்த மனுவில், ஆளுநருக்கு மத்திய அரசே கெடுவிதிக்க இருப்பதாகவும் ஆகையால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்த இருக்கிறதாம் மத்திய அரசு.












Click it and Unblock the Notifications